இலங்கையின் முதலாவது சுதந்திர தினம் எவ்வாறு இருந்தது...?
இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்துக்கு இன்னமும் நான்கே தினங்கள் தான் உள்ளன. இந்நிலையில் இலங்கை பிரித்தானியாவிடமிருந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரம்பெற்றபோது முதலாவதாக சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அப்போதைய காலகட்டத்தில் எவ்வாறு நிகழ்ந்திருக்கும்?
132 ஆண்டு கால பிரித்தானியரின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்ட நாள் 1948, பெப்ரவரி மாதம் 4 ஆக இருந்தபோதும், அது தொடர்பான வைபவங்களும் பிறநிகழ்ச்சிகளும் அந்த மாதத்தின் 17 ஆம்திகதி வரை நடைபெற்றிருந்தன. சுதந்திரம் அளிக்கப்படும் நாள் என்றபடியால், ஏற்கனவே அம்மாதம் 4 ஆம் திகதி முழு இலங்கைக்கும் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
அன்று ஒரு புதன்கிழமை. அதிகாலையிலேயே கோயில்கள், பௌத்த விகாரைகள், கிருஸ்தவ தேவாலயங்கள் ஆகியவற்றின் மணிகள் ஒலித்தன. பழைய நாடாளுமன்றத்தில் பிரித்தானியக் கொடிக்குச் சமமாக தேசியக்கொடியும் ஏற்றப்பட்டது. புதிய பிரதமராகத் தெரிவாகியிருந்த டி.எஸ்.சேனநாயக்கவுக்கு நல்வாழ்த்துக்கள் குவிந்தன. பிரித்தானியாவின் அப்போதைய பிரதமராக இருந்த Clement Attlee யிடமிருந்தும் வாழ்த்துச் செய்தி வந்திருந்தது.
சுதந்திரமடைந்த இலங்கையின் கவர்னர் ஜெனரலாக Henry Monck Mason Moore பதவியேற்றுக்கொண்டார். அந்தநிகழ்வு ராணியின் மாளிகையில் இடம்பெற்றது. (அந்தமாளிகையே தற்போது ஜனாதிபதி மாளிகை ஆக்கப்பட்டுள்ளது.) காலை 7.30 அளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.
இலங்கை சுதந்திரம் அடைந்தமை நாடளாவிய ரீதியில் அன்று வெகுவாக கொண்டாடப்பட்டது. அலரிமாளிகை, அரச அலுவலகங்கள், வர்த்தகநிலையங்கள் மற்றும் தனியார் வீடுகள் ஆகியவற்றில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அனைத்து மதவழிபாட்டிடங்களிலும் சுதந்திரதினத்தையொட்டி விசேட வழிபாடுகள் செய்யப்பட்டன. களனி ரஜமகாவிகாரையில் இடம்பெற்ற வழிபாடு, நாடு முழுவதும் வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
சுதந்திரதினத்தன்று, தெஹிவளையில் உள்ள மிருகக்காட்சிசாலை பொதுமக்களின் பார்வைக்கு இலவசமாக திறந்துவிடப்பட்டது. இதனையடுத்து ஒரு நிமிடத்திற்கு 350 பேர் அங்கு உள்நுழைந்தனர் என்று கூறப்படுகின்றது. அது சற்று மிகையாகவும் இருக்கலாம் .எனினும் அன்றைய தினம் காலை 11 மணியளவில் மட்டும் எண்ணாயிரம்பேர் தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட்டிருந்தனர்.
பிரதமரும் கவர்னர் ஜென்றலும் புதிதாகப் பிறந்த சுதந்திர இலங்கைக்கு தமது உரைகளை ஆற்றிய பின்னர், பொல்வத்த விகாரையில் பிரதமர் கரத்தினால் மாங்கன்று ஒன்று நடப்பட்டது.
சுதந்திரம் அடைந்தமை தொடர்பான மிக முக்கிய வைபவம் அந்த மாதம் 10 ஆம் திகதியே இடம்பெற்றது.சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு அன்று நடைபெற்றது. பிரித்தானியப் பேரரசராகவிருந்த ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரின் பிரதிநிதியாக க்ளௌசெஸ்டரின் பிரபு, அந்த வைபவத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ஏராளமானோர் கூடுவதற்காக பாரிய பரப்புள்ள இடமொன்று தேவைப்பட்டமை காரணமாக பழைய விமானத் தரிப்பிடமொன்று பரிந்துரைக்கப்பட்டது. அங்கு தற்காலிக மண்டபமொன்றை உருவாக்கும் பணி பொதுச்சேவைத் திணைக்களப் பொறியியலாளரான ஹப்புகொடரண் கொத்கேப்ரேமரத்ன வசம் ஒப்படைக்கப்பட்டது.
பாரம்பரிய அழகுடன் அந்த மண்டபம் உருவாக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. அந்த அலங்காரங்களுக்கு சிங்கள மரபுப்படியான சிங்கத்தின் உருவம் பொருந்திய பதாகைகளும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட நந்திக் கொடிகளும், முஸ்லிம் சமூகத்தினரின் அடையாளங்களும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்தத் தற்காலிக மண்டபத்தின் அலங்காரத்திற்காக 20,000 யார் நீளமான வெள்ளைத் துணி பயன்படுத்தப்பட்டது. ஏறக்குறைய அதேஅளவு நீளமான வண்ணக் காகிதங்களும் பயன்பட்டன.
அன்றைய தினம், நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர், பிரித்தானியப் பேரரசரின் பிரதிநிதிகளாக அங்கு வருகை தந்த பிரபு மற்றும் அவர் மனைவி ஆகியோர் விமரிசையாக வரவேற்கப்பட்டனர். அவர்களை சுதந்திர இலங்கையின் முதலாவது கவர்னர் ஜெனரலும் பிரதமரும் வரவேற்றனர். அதனையடுத்து பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
அதன்போது 21 துப்பாக்கி வேட்டுகள் மரியாதை நிமித்தம் தீர்க்கப்பட்டன. அந்த மண்டபத்தில் நடுநாயகமாக வைக்கப்பட்ட அரியணையின் முன் பேரரசரின் கிரீடமும் வாளும் வைக்கப்பட்டது. அதனையடுத்து ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நாட்டின் முக்கிய அமைப்பான நாடாளுமன்றம் தனது முதலாவது அமர்வை நடத்தியது. அந்த பெப்ரவரி மாதத்தின் 13 ஆம் திகதியன்று, கண்டிக்குச் சென்ற பிரித்தானியப் பேரரசரின் பிரதிநிதி அங்குள்ள “மகுள்மதுவ” மண்டபத்தில் நிகழ்ந்த வைபவத்தில் கலந்துகொண்டார். அங்கு இலங்கையின் தேசியக்கொடியை ஏற்றிவைத்தவர் இலங்கை சுதந்திரம் அடைந்ததை, உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
