சுகாதார அமைச்சரின் உடல்நிலை எப்படி இருக்கிறது? அவரது கணவர் வெளியிட்டுள்ள தகவல்
தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆபத்தான நிலையில் இல்லை என அவரது கணவர் காஞ்சன ஜயரட்ண குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அமைச்சர் சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொள்வதால் ஒட்சிசன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸிற்காக கேடியு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் சுவாசிப்பதில் பிரச்சினைகளை எதிர்கொண்டார். இந்த நிலையில் அவர் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதையும் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அவரை தொற்றுநோய் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
எனினும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை, அவருக்கு கடும் காய்ச்சல் காணப்பட்ட போதும் தாங்கள் மருந்துகளை வழங்க ஆரம்பித்துள்ளதால் அவர் உடல்நிலை தேறிவருகின்றார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
என்னையும், எனது குடும்ப உறுப்பினர்களையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். ஆனால் இரண்டாவது பி.சி.ஆர் சோதனையின் போது நாங்கள் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
அமைச்சரின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த எவரும் பாதிக்கப்படவில்லை. இதேவேளை அமைச்சர் கேகாலை மருத்துவரின் ஆயுர்வேத மருந்தினை பயன்படுத்தவில்லை. ஒரு சிறுதுளியை பருகிபார்த்தார்.
அமைச்சர் அந்த மருந்தினை உரிய சோதனைகளுக்கு உட்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார். அவர் அதனை அங்கீகரிக்கவில்லை. அமைச்சரோ அல்லது எங்கள் குடும்பமோ அந்த மருந்தினை பயன்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார் என தெரியவருகிறது.