வவுனியாவில் விடுதியொன்று முற்றுகை: பெண்கள் உட்பட நால்வர் கைது - 30 தோட்டாக்கள் மீட்பு (PHOTOS)
வவுனியா - தேக்கவத்தைப் பகுதியில் விடுதியொன்று பொலிஸாரால் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடுதியில் இருந்து ரி 56 ரக 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மற்றும் மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றை முற்றுகையிட்டு சோதனை நடத்தியுள்ளனர்.
பெண்கள் தப்பியோடும் சூட்சுமமான பாதை
இதன்போது குறித்த விடுதியில் தங்கியிருந்த இரு பெண்கள், விடுதி முகாமையாளரான ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் விடுதியில் பொலிஸார் சோதனை செய்தால் அங்கிருந்து பெண்கள் தப்பியோடும் வகையில் சுவர் ஒன்றில் சூட்சுமமான முறையில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தமை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் குறித்த விடுதியில் பொலிஸார் சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இயங்கு நிலையில் உள்ள ரி56 ரகத்தினை சேர்ந்த 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், விடுதி ஒய்வுபெற்ற இராணுவ வீரருடையது என்பதுடன் கைது
செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் விசாரணைகளின்
பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.