வைத்தியசாலை பணியாளர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் (Video)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுவோர் இன்று(20) எரிபொருள் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து ஆர்ப்பாட்ட பேரணியாக வந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார துறை ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்ட பேரணி
மதிய உணவு நேரத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்பாக ஒன்றுகூடியவர்கள் அங்கிருந்து கோவிந்தன் வீதியூடாக மட்டக்களப்பு நகரினை அடைந்து மட்டக்களப்பு நகர் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை முற்றிகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மாவட்ட செயலகத்தில் ஐந்து சுகாதார துறைசார்ந்தவர்கள் அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரினால் நடாத்தப்பட்டுள்ளது.
வைத்தியர் மதனழகனின் கருத்து
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுவோருக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு ஒரு தினத்தை ஒரு நிலையத்தில் ஏற்பாடு செய்து தருவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியையடுத்து போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும் தாங்கள் தொடர்ச்சியாக கோரிக்கையினை முன்வைத்து வந்த போதிலும் மாவட்ட நிர்வாகம் அதனை கவனத்தில் கொள்ளாமல் செயற்பட்டு வந்ததாக இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அத்தியாவசிய தேவையாக கருதப்படும் சுகாதார சேவையில் ஈடுபட்டுவருவோர் வந்து செல்வதற்கான எரிபொருள் மிக அத்தியாவசியமானது எனவும் அவ்வாறு எரிபொருள் வழங்காவிட்டால் வைத்தியசாலையில் நோயாளர்களை பராமரிப்பதில் பாரிய சிக்கல் நிலைகள் ஏற்படும் எனவும் இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சார்பில் வைத்தியர் மதனழகன் கருத்து தெரிவித்துள்ளார்.