யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உத்தியோகஸ்த்தர்கள் தங்கள் கடமைகளை சீராக செய்வற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்ததுடன் பொது மக்களுக்கான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் தொடர்பாக அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம்(04) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடலின் போது வைத்தியசாலை செயற்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதற்கு சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை வைத்தியசாலையின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை
இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கை ஊடாக பொது மக்களுக்கு பின்வரும் ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
- நோயாளர்களை பார்வையிடுவதற்கு பார்வையாளர் நேரத்தில் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- நோயாளருடன் விடுதிகளில் உதவிக்காக ஒருவர் மட்டுமே தங்கி நிற்க முடியும்.
- வைத்தியசாலை வளாகத்துக்குள் போதைப்பொருள் அல்லது மது பாவித்தவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கபடமாட்டார்கள்.
- விடுதிகளில் தங்கியிருக்கும் நோயாளர்களோ அல்லது உதவியாளர்களோ இரவு 7.30 மணிக்கு பின்னர் வைத்தியசாலையை விட்டு வெளியேற அனுமதிக்கபடமாட்டார்கள்.
- விடுதிகளில் வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் தங்கள் கடமைகளில் ஈடுபடும் போது உதவியாளர்கள் விடுதியை விட்டு வெளியேறி அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
- வைத்தியசாலைக்குள் வருபவர்கள் வைத்தியசாலை சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடந்துக்கொள்ள வேண்டும்.
- நோயாளரை பார்வையிடுவதற்கு குழுக்களாக வருகைதருபவர்கள் எக்காரணம கொண்டும் விடுதிகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

