ரிஷாட்டின் வீட்டில் எனது மகளின் மரணத்தில் சந்தேகம்! ஹிசாலினியின் பெற்றோர் பகீர்த் தகவல்
சிறிய தீயைக் கண்டால் கூட அச்சப்படும் என்னுடைய மகள் தானாகவே தீ மூட்டிக் கொள்ளுமளவிற்கு தைரியமானவர் அல்ல. எனவே அவருக்கு யாரேனும் தீ வைத்திருப்பார்கள் என்று நூறுவீதம் சந்தேகிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டு தீ காயங்களுடன் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
தங்களின் மகள் தொலைபேசியில் தம்முடன் பேசும்போது, தன்னை அங்குள்ளவர்கள் தும்புதடியால் தாக்குவதாகவும் தன்னால் அங்கு தொடர்ந்தும் இருக்க முடியாது என்பதால் உடனடியாக வந்து அழைத்துச் செல்லுமாறும் ஹிஷாலினி கூறியதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
கண்டியில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து ஹிஷாலினியில் தந்தை ஜெயராஜ் ஜூட்குமார் மற்றும் தாய் ஆர்.ரஞ்சனி ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜெயராஜ் ஜூட்குமார் (சிறுமியின் தந்தை) - தொழிலுக்குச் செல்லுமாறு நாம் அவரை பலவந்தப்படுத்தவில்லை. அவர் விரும்பியே சென்றார். ஆண்களைப் பார்த்தால் விலகிச் செல்லும் பெண்பிள்ளை அவர். அவருக்கு என்ன நடந்தது என்று எமக்குத் தெரியாது. எனது மகள் சிறிய தீயைக் கண்டால் கூட அஞ்சுபவர். நாம் வீட்டில் தீ மூட்டினால் கூட அருகில் இருக்க மாட்டார்.
இவ்வாறு அச்சப்படுபவர் எவ்வாறு தனக்கு தானே தீ மூட்டிக் கொள்வார் என்பதில் எமக்கு பாரிய சந்தேகம் நிலவுகிறது. அவர் தீ மூட்டிக் கொண்டிருக்க மாட்டார். யாரேனுமொருவரால் தான் தீ மூட்டப்பட்டிருக்கும். அவருக்கு தீ வைத்திருக்கிறார் என்று நூற்றுக்கு நூறுவீதம் நாம் சந்தேகிக்கின்றோம்.
கொரோனாவினால் எனக்கு தொழில் இல்லை. தொழில்புரிவதற்கு இடமில்லை. எனக்கு காலில் உபாதை காணரமாக கஷ்டப்பட்டு தொழில் செய்ய முடியாது.
ஆர்.ரஞ்சனி (சிறுமியின் தாய்) - கொவிட் நெருக்கடி நிலைமையால் நான் பெரும் கடன் சுமைகளுக்கு உள்ளானேன். என்னுடைய கணவர் மற்றும் மகன் ஆகிய இருவருமே தொழில் இன்றியே காணப்பட்டனர்.
இதன் காரணமாகவே நான் கடன் சுமைக்கு உள்ளானேன். மகளை அனுப்பி வைப்பதற்காக தங்க நகையை அடகு வைத்து 30,000 பணம் வைத்திருந்தேன். நீங்கள் பணிக்கு சென்றால் பிள்ளைகளை பராமறிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் மகளை பணிக்கு அனுப்பி வைக்குமாறு, அவரை அழைத்துச் சென்ற நபர் கூறினார்.
அதன் போது வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் கடன் வழங்கியவர்கள் வீட்டு முற்றத்தில் வந்து கூச்சலிடுவார்கள். எனவே நான் தொழிலுக்குச் சென்று கடனை மீள செலுத்த உதவுவதாகவும் சகோதரனுக்கு மாத்திரம் இதனை செய்ய முடியாது என்று கூறியே என்னுடைய மகள் தொழிலுக்குச் சென்றார்.
உண்பதற்கு கூட உணவின்றி கஷ்டப்பட்டோம். எனினும் அங்கு சென்றதன் பின்னர் எனது மகள் என்னுடன் பேசும் போது, 'அம்மா என்னால் இங்கிருக்க முடியாது. என்னை அழைத்துச் செல்லுங்கள். இங்குள்ளவர்கள் என்னை தும்புதடியால் தாக்குகின்றனர்.' என்று கூறினார். ' ஏன் அவ்வாறு செய்கின்றார்' என்று நான் மகளிடம் வினவிய போது , அங்கிருந்தவர்கள் என்னுடைய மகள் வீட்டாரிடம் (மெடம்) மரியாதையின்றி நடந்து கொள்வதாகக் கூறினார்கள்.
அத்தோடு ' உங்களுடைய மகள் பணிப்பெண் அல்லவா? எனவே வீட்டாரிடம் மரியாதையாக பேசுமாறு உங்கள் மகளிடம் கூறுங்கள் ' என்றும் தெரிவித்தனர்.
என்னுடைய மகள் சிறியவர். அவரை தாக்க வேண்டாம் என்று அந்த வீட்டாரிடம் நான் கூறினேன். அவ்வாறிருக்கையில் இம்மாதம் 3 ஆம் திகதி மாலை 3 மணியளவில் என்னுடைய மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்கள்.
4 ஆம் திகதி சென்று நாம் மகளைப் பார்த்த போது அவர் மோசமான நிலையில் இருந்தார். மேலதிகமாக பணம் பெற்றுள்ளதால் நான் தொழிலுக்கு வருவதாகக் கூறினேன். 21 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் காலை அங்கு இருப்பேன் என்று கூறினேன்.
என்னுடைய மகள் அவராகவே ஏதேனும் செய்து கொண்டிருப்பார் என்றால் அந்த வீட்டில் ஏதேனும் நடந்திருக்க வேண்டும். இவ்வாறு மற்றொரு பிள்ளைக்கும் நடந்துவிடக் கூடாது. வறுமையின் காரணமாகவே என்னைப் போன்ற தாய்மார் இவ்வாறான தவறை இழைக்கின்றனர்.
எனவே குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நான் வணங்கிக் கேட்டுக் கொள்கின்றேன்.
கேள்வி : உங்களுடைய மகள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். அவ்வாறு இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளதா ?
பதில் : இல்லை. அவ்வாறு செய்து கொள்வதற்கான காரணிகள் காணப்பட்டாலும் தொலைபேசியில் அவர் யாருடனாவது பேசியிருக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் தாய் என்ற ரீதியில் எம்மிடம் ஏதேனும் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.
You My Like This Video