இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு நீதி கோரி டில்லியில் இந்து அமைப்புகள் போராட்டம்
இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு நீதி கோரி டில்லியில் இந்து அமைப்புகள் நேற்று முன்தினம் போராட்டம் ஒன்றினை (05.04.2023) முன்னெடுத்துள்ளன.
ஆலயங்கள் இடிக்கப்படுவது மற்றும் இந்துக்களுக்கு தீங்கு இழைக்கப்படுவது ஒரு கலாச்சார இனப்படுகொலை எனவும் இந்து அமைப்புக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கட்டுமானப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் பழங்கால கோயில்கள் அரசாங்கத்தால் தொடர்ந்தும் இடித்துத் தள்ளப்பட்டு வருகின்றன.
இந்து தமிழ் சமூகத்தின் கலாச்சார இனப்படுகொலை
பழங்கால வரலாற்று மற்றும் சமய முக்கியத்துவம் வாய்ந்த இந்து கோவில்களை இடித்து அழிப்பதன் மூலம் இந்து தமிழ் சமூகத்தின் கலாச்சார இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் செய்து வருவதாக தெரிகிறது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ள நிலையில் உலகெங்கிலும் உள்ள இந்து அமைப்புகள் மத்தியில் இந்த விடயம் தொடர்பில் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் தொல்லியல் ஆய்வு வளர்ச்சி மற்றும் உற்பத்தி பணிகள் என்ற பெயரில் கோவில்களின் தோற்றத்தை அழித்து, அவற்றை இடிப்பது சகிக்க முடியாத குற்றமாக கருதப்படுகிறது.
இந்துக்களுக்கும் இந்தியாவுக்கும் எதிரான தீங்கிழைக்கும் செயல்
இந்துப் போராட்டக் குழுவின் சர்வதேசத் தலைவர் ஸ்ரீ அருண் உபாத்யாய், இது இந்துக்களுக்கும், இந்தியாவுக்கும் எதிரான தீங்கிழைக்கும் செயல் என்று வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இந்திய அரசாங்கம் இந்தப் பிரச்சினையை உணர்ந்து இந்தியா செல்ல இருக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கடுமையாக ஆட்சேபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.