வரலாற்றில் மிக அதிக எரிபொருள் விலை அநுர ஆட்சியில் பதிவானது! வெளியானது தகவல்
வரலாற்றில் மிக அதிகப்படியான எரிபொருள் விலை அநுர ஆட்சியிலேயே காணப்படுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று(09.04.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த செப்டெம்பர் மாதம் 352 ரூபாவாக இருந்த சூப்பர் டீசல் விலை தற்போது 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு, மக்களின் சுமை 248 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை
உலக சந்தையில் எண்ணெய் விலை 95 டொலராகக் குறைந்திருந்தாலும், அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் யுத்தத்தைக் காரணம் காட்டி அரசாங்கம் மக்களை ஏமாற்றுகின்றது.

பிச்சைக்காரனின் காயம் போல யுத்தத்தை அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றது.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல இருப்பதாகவும், மக்கள் விரைவில் இந்த அரசாங்கத்திற்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் ஜானக வக்கும்புர கூறியுள்ளார்.