அதியுயர் பாதுகாப்பு வலயத்தை கமல் குணரத்னவே நடைமுறைப்படுத்தினார்! ஹர்ஷ டி சில்வா
பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். தற்போதைய வெளியுறவு அமைச்சரும் கோட்டாபயவின் ஆட்சியின் போது பொருளாதார குற்றங்களுக்கு காரணமானவர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தற்போது திரும்பி வந்து மலலசேகர மாவத்தையில் தனது சுகபோகங்களை அனுபவித்து வருகிறார். பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சவும் அவரது கூட்டாளிகளுமே காரணம்.
அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்
அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நடைமுறைப்படுத்தியது ஜனாதிபதியல்ல, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவே.
இந்த நிலையில் கமல் குணரத்னவின் நடவடிக்கையின் தவிர்க்க முடியாத பேரழிவு, ஒரு சமூக - அரசியல் வெடிப்பாக இருக்கும். கமல் குணரத்ன உள்ளிட்ட குழுவினர் கடந்த காலத்தை போன்றே தற்போதும் இயங்குகிறார்கள்.
முன்னர் ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர் கோட்டாபய ராஜபக்ஷ அல்லவா.
தண்ணீர் கேட்டபோது மக்களை சுட்டு வீழ்த்தியவர்கள், நாளை மக்கள் உணவு கேட்கும் போதும், முன்னரை போன்றே அவர்களை சுட்டு வீழ்த்துவார்களா என குறிப்பிட்டுள்ளார்.