மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை - மின்சாரமும் துண்டிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாகப் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
இதன்போது உடனடியாக செயற்பட்ட மின்சார சபையினர் சிறிது நேரத்தில் மின்சாரத்தினை வழமைக்குக் கொண்டுவந்துள்ளனர்.
இதேநேரம் நேற்று மாலை பெய்த பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்ததன் காரணமாகப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டிருந்தன.
சில பகுதிகளில் கட்டிடங்களில் மரங்கள் வீழ்ந்ததன் காரணமாகக் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், மட்டக்களப்பு தேர்தல் திணைக்களத்தின் மதிலும் சேதமடைந்துள்ளதைக் காணமுடிந்தது.
இன்று காலை தொடக்கம் மட்டக்களப்பு மாநகரசபையின் அனர்த்த முகாமைத்துவ குழுவினர் முறிந்து வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது பல வீதிகளில் முறிந்து வீழ்ந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.