மீண்டும் கனமழை எச்சரிக்கை : பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாடுகள் தீவிரம்!
நாட்டில் இன்று (29) முதல் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்க நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) ஆகியவற்றுடன் இணைந்து அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மற்றும் மீட்புக் குழுவினர் தயார் நிலையில்
அந்தமான் தீவுகளுக்கு அருகிலுள்ள வளிமண்டலக் குழப்பம் காரணமாக வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் 50 மில்லிமீற்றர் முதல் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் மதிப்பீட்டில் உள்ளவர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் தகவலின்படி, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அனைத்து அதிகாரிகளுக்கும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் மத்திய மலைநாட்டில் அனர்த்த அபாயம் உள்ள பகுதிகளில் நில உரிமை மற்றும் இடமாற்றம் குறித்து மதிப்பீடு செய்ய 50 குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.
மேலும் அவசர உதவிகளுக்கு பொலிஸ் மற்றும் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் வீசிய 'டித்வா' சூறாவளியின் போது, முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் அரசாங்கம் சரியாக செயற்படவில்லை என எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இவ்வாறான பின்னணியில், தற்போதைய வானிலை எச்சரிக்கையை அரசாங்கம் மிகவும் தீவிரமாகக் கையாண்டு வருகின்றது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் விழிப்புணர்வு பிரிவு பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி, வானிலை முன்னறிவிப்புகளுக்கு ஏற்ப அனைத்து தயார் நிலைகளும் எட்டப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |