ஆரோக்கியமான பிள்ளைகளுக்கு தடுப்பூசி அவசியமில்லை – திஸ்ஸ விதாரண
ஆரோக்கியமான உடல் நிலையை உடைய பிள்ளைகளுக்கு கோவிட் தடுப்பூசி அவசியமில்லை என இலங்கையின் சிரேஸ்ட தொற்று நோயியல் நிபுணர்களில் ஒருவரும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண(Tissa Vitharana) தெரிவித்துள்ளார்.
நாட்பட்ட நோய்களை உடைய மற்றும் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
எனினும் உடல் ஆரோக்கியம் மிகுந்த பிள்ளைகளுக்கு அடிப்படை சுகாதார வழிமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டல்களை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பதனை கண்காணிப்பதற்கு பாடசாலை மட்டத்தில் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். தடுப்பூசியினால் மரணங்கள் குறைவதுடன், நோய் பாதிப்பு வரையறுக்கப்படுகின்றதே தவிர நோய் பரவுகை கட்டுப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு சமூக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதவற்கு மொத்த சனத்தொகையில் 80 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு நோய் நிலைமைகளினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆண்டுதோறும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் கோவிட் பிரச்சினை இன்னும் ஓராண்டு காலம் வரையிலேனும் நீடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.