மன்னார் பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர்
மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) விஜயம் செய்துள்ளார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாகவும் ஆராயும் குறித்த கண்காணிப்பு விஜயம் இன்றையதினம் (17.07.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையிலான அமைச்சின் செயலாளர் உள்ளடங்களான குழுவினர் நேரடியாக வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டதுடன் வெளி நோயாளர் பிரிவு உள்ளடங்களாக வைத்தியசாலையை பார்வையிட்டனர்.
வைத்தியசாலை குறைபாடுகள்
அதனைத் தொடர்ந்து, வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர், அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் அமைச்சரிடம் நேரடியாக குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
குறிப்பாக 'CT' ஸ்கேன் இயந்திரம் இன்மையால் நாள்தோறும் அதிகளவான நோயாளர்கள் வெளிமாவட்டங்களுக்கு செல்வதாகவும் மருத்துவர் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை, சுத்திகரிப்பு பணியாளர் குறைபாடு, மருத்துவ உபகரணங்கள் குறைபாடு, அவசர நோயாளர் வண்டியின் குறைபாடு உள்ளடங்களாக பல்வேறு விடயங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அமைச்சர் வாக்குறுதி
இந்தநிலையில், தீர்க்க கூடிய மிக முக்கிய விடயங்களை விரைவில் தீர்த்து தருவதாகவும் ஏனைய விடயங்கள் வரவு செலவு திட்டத்தின் ஊடாக பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் வாக்குறுதி வழங்கியிருந்தார்.
குறித்த நிகழ்வில் அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



