இனவாதக் கும்பலிடம் சரணடைந்து மக்களுக்குத் துரோகம் செய்யவில்லை: சஜித் பிரேமதாச (Video)
தான் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்காக இனவாதக் கும்பலிடம் சரணடைந்து மக்களுக்குத் துரோகம் செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நுவரெலியா - ஹட்டன் பிரதேசத்தில் நேற்று (30.10.2022) நடைபெற்ற தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமையகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அன்று நான் ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டிருந்தால் மொட்டுவின் பாதுகாவலராக மாற வேண்டியிருந்திருக்கும்.

இனவாத, மதவாத கும்பலுடன் இணைய வேண்டியிருந்திருக்கும். இனவாதி ஒருவரின் முன்னால் சென்று சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டி ஏற்பட்டிருக்கும். அவ்வாறானதொரு விடயத்துக்கு நான் ஒருபோதும் தயாராகவில்லை.
எனது சுயமரியாதையை நான் அதிகம் மதிக்கின்றேன்.
பதவிகளுக்காக எனது சுயமரியாதையைக் காட்டிக் கொடுக்காத பயணத்தை மேற்கொள்கின்றேன். சாம்பலில் இருந்து எழ முயற்சிப்பவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இந்நாட்டின் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி அரசை அமைக்கத் தயாராக இருக்கின்றார்கள். கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவுகளால் முழு நாடும் வங்குரோத்தடைந்தாலும், குறிப்பாக பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை முற்றாகவே சரிந்தது.
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகுந்த புரிதலுடன் இருந்தார். அவர்களுக்கு குடியுரிமை வழங்குதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். பெருந்தோட்டங்களில் வாழும் மக்களை எப்போதும் தொழிலாளிகளாகவே வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் அதை முற்றிலும் மாற்றுவோம்.
அவர்களுக்கு மிக சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். அடிமைக் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும்.
அன்றும் இன்றும் தோட்டங்களில் வாழும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும் எனக் கூறுவது ஒரு ஏற்பாட்டுடனேயே ஆகும் என தெரிவித்துள்ளார்.
ஜீவன் தொண்டமானின் கருத்து
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்,
மலையக மறுமலர்ச்சிக்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டமே அவசியம்.
என்னை அன்புடன் வரவேற்ற சகோதர அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு நன்றிகள். நான் விருந்தாளி அல்ல. உங்களில் ஒருவன். நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள்.
நான் இங்கு வந்தது குறித்து பலருக்கு பலவித உணர்வுகள் இருக்கலாம். ஆனால் எமது சமூகத்தை முன்னேற்றுவதற்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டம் அவசியம். அதற்கான ஆரம்பமே இது. வெறுப்பையும், எதிர்ப்பையும் வைத்து அரசியல் செய்ய முடியாது.
நீடிக்கவும் முடியாது என்பது எனது சிறிய அரசியல் வாழ்வில் நான் படித்த அனுபவம். அன்பாலும், ஒன்றிணைவாலுமே எல்லாம் சாத்தியப்படும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எனக்கு சிறந்த வழிகாட்டி. தந்தை ஸ்தானத்தில் இருந்து என்னை வழிநடத்துகின்றார். திகாம்பரமும் எனது மூத்த சகோதரன் போன்றவர் என தெரிவித்துள்ளார்.
பழனி திகாம்பரத்தின் கருத்து
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் கருத்து தெரிவிக்கையில்,
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை, சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கான வேலைத்திட்டத்தின் போது தமிழ் முற்போக்கு கூட்டணியும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இணைந்து செயற்படும். மலையகத்தில் இனி வன்முறை அரசியலுக்கு இடமில்லை. புதிய அரசியல் கலாச்சாரம் பிறந்துள்ளது.
நான் நான்கு வருடங்களாக அமைச்சராக இருந்தேன். அக்காலப்பகுதியில் மக்களுக்கு சிறந்த சேவை ஆற்றினேன். மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கும் திட்டம் வெற்றியளிக்க பிரதான இரு தொழிற்சங்கங்களும் ஒன்றிணைய வேண்டும்.
கடந்த காலங்களில் தொண்டர்களை, தலைவர்கள் தூண்டிவிட்டனர். இதனால் வன்முறை அரசியல் உருவானது. சிறைச்சாலைகளுக்குகூட செல்ல வேண்டி ஏற்பட்டது.
ஆனால் இனி அவ்வாறு நடக்காது, அவர்கள் அரசியலை அவர்கள் செய்வார்கள். எங்கள் அரசியலை நாம் செய்வோம். இணைய வேண்டிய நேரத்தில் இணைவோம். ஒரு கையால் மட்டும் ஓசை எழுப்ப முடியாது.

ஒரு கைகளும் அவசியம். நுவரெலியா மாவட்டத்துக்கு ஆங்கில மொழிமூல பாடசாலையொன்று அவசியம். அதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் அவசியம் என தெரிவித்துள்ளார்.
மனோ கணேசனின் கருத்து
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற எம்.பியுமான மனோ கணேசன் கருத்து தெரிவிக்கையில்,
மலையகத் தமிழர்களின் எழுச்சி, வளர்ச்சியில் இரட்டை குழல் துப்பாக்கியாகச் செயற்படுவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அழைப்பு விடுத்திருந்தேன். அது தற்போது சாத்தியப்பட்டுள்ளது.
மலையக மக்கள் உழைப்பாளர்களாக இலங்கைக்கு அடியெடுத்து வைத்து 2023ஆம் ஆண்டுடன் இருநூறு வருடங்களாகின்றன. நாங்கள் இங்கு உழைப்பதற்கு மட்டும் வரவில்லை. ஆளவும்தான் வந்துள்ளோம்.
கண்டி இராச்சியத்தை கடைசியாக ஆண்ட மன்னன்கூட இந்தியா வம்சாவளி தமிழர்தான். எனவே, நாங்களும் ஆண்டபரம்பரைதான். இலங்கையில் இன்று ஒரு தேசிய இனமாக எழுச்சி பெற்றுள்ளோம்.
மலையகத்தில் இருந்து வெளியே சென்று தொழில் செய்பவர்கள், தோட்டத் தொழிலாளர்களை தூக்கி விடுவதற்கு பங்களிப்பு செய்ய வேண்டும். அதற்கான கடப்பாடு அனைவருக்கும் உள்ளது. இலங்கை அரசாங்கமும் தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தை சமூக வளர்ச்சிக்காக வகுக்க வேண்டும்.
அதேவேளை, தேயிலை ஏற்றுமதிமூலம் சிறந்த வருமானம் கிடைக்கின்றது. எனினும், அவற்றை பகிர்ந்துக்கொள்வதற்கு தோட்ட நிறுவனங்கள் தயாரில்லை. எனவே, தொழிலாளர்களுடன் வருமானங்களை பகிர்ந்துகொள்ள தோட்ட நிறுவனங்கள் தாமாக முன்வர வேண்டும்.

இல்லையேல் தோட்ட நிறுவனங்களுக்கு மறக்க முடியாத பாடத்தை கற்பிப்போம். எங்கள் பொறுமையையும், நிதானத்தையும் எவரும் பலவீனமாக கருதிவிடக்கூடாது என தெரிவித்துள்ளார்.
இராதாகிருஷ்ணனின் கருத்து
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கிலேயே தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு நீதி அமைச்சர் கோரியுள்ளார். இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.
எந்தவொரு தேர்தலையும் சந்திக்க தயார் என ராஜபக்சர்கள் கூறுகின்றனர்.
ஆனால் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு நீதி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தலை ஒத்திவைப்பதே இதன் நோக்கம். ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரமே விஜயதாச ராஜபக்ச இவ்வாறு செயற்பட்டிருப்பார்.

மேலும், தேர்தல் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் இரட்டை நிலைப்பாடு உள்ளது.
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள நாம் தயார். உள்ளூராட்சி தேர்தலை பிற்போட இடமளிக்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.
வேலுகுமாரின் கருத்து
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் கருத்து தெரிவிக்கையில்,
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை கூலித்தொழிலாளிகளாக வைத்து பராமரிப்பதற்கு கட்டிடங்கள் திறக்கப்பட்ட காலம் முடிந்துவிட்டது. எனவே, கூலித்தொழில் முறைமையை ஒழித்து, சுதந்திரமான மலையகத்தை கட்டியழுப்ப வேண்டும்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தாயகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது வெறும் கட்டிட திறப்பு விழா அல்ல. மலையக சமூகத்தினுடைய அடையாளத்தை பிரதிபலிக்கும் நிகழ்வாகும்.
அதாவது ஒரு தேசிய இனத்துக்குரிய அம்சத்தை வெளிப்படுத்தியுள்ளோம். கடந்த 2000ஆம் ஆண்டு ஆண்டுகளில் மலையகத்தில் பல திறப்பு விழாக்கள் நடந்தன. பெருந்தோட்ட மக்களை கூலித்தொழிலாளர்களாக பராமரிக்கவே இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன.
இனியும் இவ்வாறான விடயங்களுக்கு இடமில்லை. கூலித்தொழில் முறைமையை ஒழித்து, தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். சுதந்திரமான மலையக சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
அதற்கான ஆரம்பமாக இந்த தலைமையகம் அடையாளப்படுத்தப்படுகின்றது. எனவே, கூலித்தொழில் முறைமையை ஒழித்து புதிய மாற்றத்துக்குள் அடியெடுத்து வைப்பதற்கான தலைமைத்துவத்தையே எமது தலைவர்கள் வழங்க வேண்டும். மாறாக கூலித்தொழிலாளர்களாக எமது மக்களை பராமரிப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
எம். உதயகுமாரின் கருத்து
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் கருத்து தெரிவிக்கையில்,
அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது சஜித் பிரேமதாசவுக்கே தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்கும்.
கோவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற ஆபத்துகளின்போது இந்தியாவே எமக்கு கைகொடுத்தது. ஆபத்துக்கு உதவும் உண்மையான நண்பன் இந்தியா என்பதை மறந்துவிடக்கூடாது.
இலங்கையை பாதாளத்துக்குள் தள்ளிவிட்டு கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு ஓடினார். அதன்பின்னர் மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் வரமுடியாத ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார்.

தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை. எனவே, விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெற்றால் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயம் தோள் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.