கறுப்பு ஜூலையை நினைவு கூரும் முகமாக ஹட்டனில் நடைப்பெற்ற விசேட நிகழ்வு
கறுப்பு ஜூலையின் போது நாட்டில் ஏற்பட்ட இன வன்முறைகளால் ஏற்பட்ட வரலாற்றுக் காயங்களை ஆற்றுவதுடன், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், ஹட்டனில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு, 'இனவாதம் வேண்டாம் – இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுபடுவோம்' என்ற தொனிப்பொருளில் நேற்று(29.07.2026) ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள புத்தர் சிலை அமைந்துள்ள பகுதியில் நடைபெற்றுள்ளது.
கையெழுத்துப் பெறும் நடவடிக்கை
நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின் ஆரம்பத்தில் சர்வமதத் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் கலைச்செல்வி மற்றும் மஞ்சுல சுரவீர ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

பின்னர், பிரதேச மக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். இதனுடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதன்போது கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான மஞ்சுல சுரவீர, ”கறுப்பு ஜூலையினால் நாட்டில் ஏற்பட்ட வடுவை போக்கி, மக்கள் மத்தியில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பல தசாப்தங்களுக்கு முன்னர் நாட்டில் இடம்பெற்ற இன வன்முறைகளினால் அப்பாவி மக்களின் உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்டதாகவும், அந்தச் சம்பவங்கள் இலங்கை வரலாற்றில் அழிக்க முடியாத வடுவாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரகீத் எக்னெலிகொட வழக்கில் திருப்பம் - விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சுரேஷ்குமாரின் அதிர்ச்சி சாட்சியம்





