ஹட்டனில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) சஃபாரி பேருந்து இன்று(06.04.2026) முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இரத்தமலானை பணிமனையில் சேவையிலிருந்து நீக்கப்பட்டிருந்த இந்த பழைய பேருந்து, ஹட்டன் பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடனும் 42 இருக்கைகளுடன் ரூ. 4 மில்லியன் செலவில் புதுப்பித்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் மேல் கூரையுடன் மற்றும் வறண்ட காலத்தில் கூரையின்றி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சஃபாரி பேருந்தில் ஒலி அமைப்பு, கவர்ச்சிகரமான மின்விளக்குகள் மற்றும் பல நவீன டிஜிட்டல் துணைக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இன்று முதல் பேருந்து சேவை ஆரம்பம்
மேலும், இந்த SLTB சஃபாரி பேருந்தை நுவரெலியா மாவட்டத்திற்குள் அல்லது வெளியே எந்தப் பயணத்திற்கும் SLTB கட்டணத்தில் முன்பதிவு செய்யலாம் என ஹட்டன் பணிமனை மேலாளர் திரு. பாலித வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தப் பேருந்திற்குத் தனி ஓட்டுநர் மற்றும் நடத்துநர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடும் ஹட்டன் தொடருந்து நிலையத்திலிருந்து நல்லத்தண்ணி வரை நடைபெறும் 2026 - 2027 ஆம் ஆண்டு ஸ்ரீபாத மலை யாத்திரைக்கான சேவையிலும் இந்தப் பேருந்தை இணைக்க பணிமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சஃபாரி பேருந்து திறப்பு விழாவில் ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர, நுவரெலியா மாவட்ட SLTB பிரதம மேலாளர் ஆர்.எம்.ஆர்.ஜே.பி. தசநாயக்க மற்றும் ஹட்டன் SLTB பணிமனையின் பல ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


