வடக்கு - கிழக்கில் நிர்வாக முடக்கல்: பல்கலைக்கழக மாணவ ஒன்றியங்களால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் தமிழர் தாயகத்தில் முன்னெக்கப்படும் பௌத்த மயமாக்கலை எதிர்த்து, தமிழ்த் தேசியக் கட்சிகளால் நாளை மறுதினம் (25.04.2025) முன்னெடுக்கப்படும் நிர்வாக முடக்கலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கிழக்கு பல்கலைக்கழக கலைகலசார பீட மாணவர் ஒன்றியம், இலங்கை திறந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன தெரிவித்துள்ளன.
இதற்கமைய ''நிர்வாக முடக்கலுக்கு எமது பூரண ஆதரவு உண்டு. இதனை முன்னெடுக்கின்ற அரசியல்வாதிகள் வெறுமனே கதவடைப்புடன் மாத்திரம் தமது எதிர்ப்புக்களை சுருக்கிவிடாது தொடர்ச்சியாக மக்கள் மயப்படுத்திய போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்" என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்
இதன்போது "தமிழர்களின் இருப்பை நசுக்கவும் போராட்டச் சிந்தனையை முற்றாக இல்லாது செய்யவும் 30 வருடங்களாக நடைமுறையிலிருந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஜனநாயகத்தை மீறியவகையில் பலவாறாக எம்மைப் பாதித்தது. இதனை நிறுத்துவதை விடுத்து இதற்கு மேலாக நடைமுறைக்கு வரவிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அரச இயந்திரத்தின் சதிச்செயலாகும். இதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்படும் வடக்கு மற்றும் கிழக்கு தழுவிய நிர்வாக முடக்கலுக்கு எமது பூரண ஆதரவை வழங்குகின்றோம்" என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் சில்வெஸ்டார் ஜெல்சின் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக எமது மாணவர் சமூகத்தை நசுக்குகின்ற ஒரு சட்டமான இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் எத்தனை உருமாறி வந்தாலும் அது ஆபத்தானதே. நாளைமறுதினம் முன்னெடுக்கப்படவுள்ள பூரண நிர்வாக முடக்கலுக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களாகிய எமது பூரண ஆதரவு உள்ளது" என கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேலும் "தெற்கிலே நாளை 24 ஆம் திகதி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கின்றது. இந்நிலையில் வடக்கு - கிழக்கில் இவ்வாறான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த பூரண நிர்வாக முடக்கலுக்கு நாம் ஆதரவளிக்கின்றோம்" என இலங்கை திறந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளமை குறிப்புடத்தக்கது.