ஹரின் எம்.பிக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது!
கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவிற்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்த நிலையில், அது கொழும்பு அரசியலில் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட இருப்பதாக அந்த நேரத்தில் பரவலாக பேசப்பட்டது.
இதனையடுத்து, கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஹரின் பெர்னாண்டோ சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"பிரபல இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டபாய ரணசிங்க தலைமையிலான அற்புதமான குழுவினருக்கு எனது நன்றிகள். சிக்கலான சிகிச்சை, இதற்கு வெளிநாட்டு சிகிச்சை தேவை,
எனினும், இந்த சிறந்த குழுவினரால் உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடவுளுக்கும் நன்றி” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.