சுற்றுலா கப்பலில் மனிதர்களுக்கு இடையே ஹண்டா வைரஸ் பரவல்: உலக சுகாதார நிறுவனம் புதிய தகவல்
அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்த 'எம்.வி. ஹோண்டியஸ்' சுற்றுலா கப்பலில், ஹண்டா வைரஸ் தொற்று மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக எலிகள் மூலமே பரவும் இந்த வைரஸ், இந்தக் கப்பலில் மிக நெருக்கமான தொடர்பில் இருந்தவர்களுக்கு இடையே பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஹண்டா வைரஸ் பரவல்
குறிப்பாக, பலியானவர்களில் இருவர் நெதர்லாந்தைச் சேர்ந்த தம்பதியர் என்பதால், அறையைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் இத்தகைய தொற்று ஏற்பட்டிருக்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி டாக்டர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை இந்தக் கப்பலில் இரண்டு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஐந்து பேர் சந்தேகத்திற்குரிய பாதிப்பில் உள்ளனர்.
பலியானவர்களில் ஒரு நெதர்லாந்து தம்பதியும், ஒரு ஜெர்மனி நாட்டவரும் அடங்குவர். 69 வயதுடைய பிரித்தானிய பயணி ஒருவர் தென்னாப்பிரிக்காவிற்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.
கப்பலில் உள்ள எஞ்சிய 149 பயணிகளும் கேப் வெர்டே கடற்கரை அருகே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் அதிசயத் தேர்தல்! தவெக தலைவர் விஜய் சற்றுமுன்னர் வெளியிட்ட பதிவு
புதிய தகவல்
சுவாசப் பாதிப்பு உள்ள மேலும் இரண்டு ஊழியர்களை நெதர்லாந்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வைரஸ் பாதிப்பு குறித்துக் கப்பலில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அறிகுறிகள் உள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிப்பவர்கள் முழுமையான பாதுகாப்பு உடைகளை (PPE) அணிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் கேனரி தீவுகளில் இந்தக் கப்பலை நிறுத்த அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், மருத்துவ ஆய்வுகளுக்குப் பிறகே அது குறித்து முடிவு எடுக்கப்படும் என ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் ஆபத்து மிகக் குறைவு என்றே சுகாதார வல்லுநர்கள் இப்போதும் வலியுறுத்தி வருகின்றனர்.