வெலிவேரிய துப்பாக்கிச் சூடு கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கலா..!
வெலிவேரியவில் நேற்று இரவு 26 வயது இளைஞரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான தகராறின் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த இளைஞருக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை. ஆனால் அவர் பிரபல பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த "கெஹல்பத்தர பத்மே" உடன் நெருங்கிய கூட்டாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாதாள உலகக் கும்பல் தலைவரான 'கணேமுல்ல சஞ்சீவ'வின் அண்மைய கொலைக்கு பழிவாங்கும் தாக்குதலாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நெருங்கிய கூட்டாளி
இந்நிலையில், நேற்றைய சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் வாடகை வாகனத்தின் ஓட்டுநராகப் பணிபுரிகிறார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவருக்கு, காலியில் இறக்கிவிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரை வெலிவேரியவிற்கு அழைத்துச் செல்லுமாறு வாகன உரிமையாளர் தகவல் அளித்திருந்தார்.
அதன்படி, குறித்த இளைஞன், அந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, இளைஞன் கையில் பாதிக்கப்பட்ட நிலையில், தானே காரை ஓட்டி கம்பஹா மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
