கொழும்பு பல்கலையில் மிகப் பெரும் சாதனைப் படைத்த தமிழ் மாணவி! வெற்றியின் இரகசியம் தொடர்பில் அவரே வெளியிட்ட தகவல்
13 தங்கப் பதக்கங்களைப் பெறுவேன் என்று நினைக்கவில்லை, ஆனால் இறுதி எம்பிபிஎஸ் பரீட்சையை மிக திறமையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்தது. அதன் பிறகு பட்டமளிப்பு விழாவிற்கு சென்றபோது எனக்கிருந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் கூற முடியாது என வைத்தியர் தணிகாசலம் தர்ஷிக்கா தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் 13 தங்கப் பதக்கங்களை அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா என்ற குறித்த மாணவிப் பெற்று சாதனை படைத்தார்.
அவரது இந்த சாதனை, அவரது வெற்றியின் இரகசியம் மற்றும் அவரது எதிர்கால லட்சியம் தொடர்பில் அவர் கூறுகையில்,
சிறந்த மாணவருக்கான விருது எனக்கு கிடைக்கப்பெற்றவுடன், எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நான் நன்றிக் கூற கடமைப்பட்டவளாக இருந்தேன்.
என்னுடைய ஆரம்பக்கல்வி, உயர்தரக் கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி ஆகியவற்றில் நிறைய பேர் எனக்கு உறுதுனையாக இருந்தனர்.
ஒருவர் சாதிக்க வேண்டும் என்றால் அவருடைய முயற்சியுடன் சேர்த்து அவரைச் சார்ந்தோர்களின் ஊக்குவிப்பும் மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.
என்னைப் பொறுத்தமட்டில் என்னை ஊக்குவித்தவர்கள் தான் அதிகமே தவிர என்னை யாரும் மட்டம் தட்டியதில்லை.
இந்த பாராட்டுக்கள் தான் எங்களது குடும்பச் சூழலில் இருந்து நான் இப்படியொரு நிலைக்கு வர மிகப் பிரதான காரணமாக இருந்தது.
பல்கலைக்கழகத்திலும் எனது விரிவுரையாளர்கள் மற்றும் நண்பர்கள், அத்துடன் எனக்கு முன்னாள் படித்த மாணவர்கள் ஆகியோரே எனக்கு மிக உறுதுணையாக இருந்தனர்.
என்னுடைய எதிர்கால லட்சியம் என்றால், இத்தோடு நின்று விடாமல் மேலும் படிக்க வேண்டும், அத்துடன் ஒரு சிறந்த இருதய நிபுணராக வரவேண்டும் என்பதே என்னுடைய அவா. அத்துடன் இந்த நாட்டு மக்களுக்கு எனது சிறப்பான மருத்துவ சேவையை வழங்க வேண்டும்.
வைத்தியர் என்றால் வெறும் கல்வித் தகைமை மட்டும் அல்ல, சமூகத்தில் உள்ள மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவதே. நோய்கள் எல்லாவற்றிற்கும் மருந்துகள் இல்லை.
சிறந்த மருந்து என்றால் ஒரு வைத்தியர் நோயாளிக்கு வழங்கும் திடமான வார்த்தைகள் தான். அவ்வாறான ஒரு பணியை நான் செய்ய விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.



