அரசாங்கம் அரசாங்கத்தையே விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் – ஜனாதிபதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பான உண்மையை கண்டறிய, அரசாங்கம் அரசாங்கத்தையே விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாய்கக தெரிவித்துள்ளார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் 50ம் ஆண்டு மத வாழ்வு பூர்த்தியினை குறிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பான உண்மை அம்பலமாக்கப்படும் எனவும், தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கான உண்மையை கண்டுபிடிக்க, அரசாங்கமே தனக்கு எதிராக விசாரணைக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகும். இது ஒரு பெரிய சவாலான செயல். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயமாக நீதியை வழங்குவோம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கார்டினலின் நீதிக்கான கோரிக்கையை அரசு மரியாதையுடன் ஏற்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
கார்டினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சில நேரங்களில் அமைதியாகவும், சில நேரங்களில் தீவிரமாகவும் ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக பேசுகிறார். எப்படியாக இருந்தாலும், அவரது கோரிக்கைகளை நாங்கள் மதிக்கின்றோம்," என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்காக, மக்களுக்கு முன்னுதாரணமான தலைவர்கள் தேவை என்றும், இன்று நாட்டின் சமூகத்தில் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் இடையே உள்ள உறவுகள், மதத் தலைவர்களிடையே உள்ள நெருக்கங்கள் என அனைத்தும் குறைந்துவிட்ட நிலையை நோக்கி செல்கின்றது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
