போலிப் பிரசாரங்களை செய்வோருக்கு அரசாங்கம் கடும் எச்சரிக்கை
எரிபொருள் விநியோகத்தை தடுக்கும் வகையில் பிரசாரம் செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு அமைதியான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்க முயற்சிப்போர் அல்லது குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் போலி தகவல்கள் மற்றும் போலிப் பிரசாரங்களை (Fake News) சமூகமயப்படுத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய உலகளாவிய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, எரிபொருள் விநியோகத்தை சீராக முன்னெடுக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எரிபொருள் விநியோகம் மற்றும் நுகர்வை முகாமைத்துவம் செய்ய பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் நாட்டின் வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் வேளையில், இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து அரசாங்கமும் பொதுமக்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விநியோகத்தை முறையாக நிர்வகிக்கும் பொருட்டு, QR Code முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு பொதுமக்கள் தங்களது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதன்போது விசேட கோரிக்கையை முன்வைத்துள்ளார்.