தமிழரின் காணி பறிப்பு விடயத்தை நோக்காக கொண்டு அரசாங்கம் செயற்படுகின்றது: சமூக செயற்பாட்டாளர் மயூரன்
இலங்கை அரசாங்கமானது தமிழ் மக்களுடைய காணி பறிப்பு என்ற ஒரேயொரு விடயத்தை மட்டுமே நோக்காக கொண்டு பெரும்பான்மையின மக்களை குடியேற்றி இனவிகிதாசாரத்தையும், இன சமத்துவத்தையும் அழிக்கும் நோக்கில் செயற்படுகிறார்கள் என சமூக செயற்பாட்டாளரான இரத்தினராசா மயூரன் தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலை தொடர்பான வழக்கு விசாரணைக்காக இன்றையதினம் நீதிமன்றிற்கு வருகை தந்து வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “குறித்த வழக்கானது ஓராண்டுக்கு மேற்பட்ட நிலையில் தொடர்ச்சியாக தவணையிடப்பட்டு கொண்டிருக்கின்றது.
காணி பறிப்பு
இதுவரை சந்தேக நபர்களாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை கூட மன்றிற்கு கொண்டு வரமுடியாத நிலையிலே இருக்கிறார்கள்.
அந்தவகையில் எங்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் சட்டவிரோதமாக தொல்லியல் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டு அரசினுடைய எந்தவித நடைமுறை விதிகளையும் பின்பற்றாது நள்ளிரவில், ஒரு விடுமுறை தினத்தில் எல்லைக்கற்கள் போடப்பட்டன.
எனினும், இன்றுவரை குருந்தூர்மலை சுற்று அயற்புறங்களில் அரச, தனியார் காணிகளில் அகற்றப்படாத நிலை காணப்படுகிறது.
இந்நிலையில், இதற்கு முன்னர் இருந்த ராஜபக்ச அரசாங்கமாக இருந்தாலும் சரி தற்போதுள்ள ரணில் விக்ரமசிங்க அரசாங்கமாக இருந்தாலும் சரி தமிழ் மக்களுடைய காணி பறிப்பு என்ற ஒரேயொரு விடயத்தை மட்டுமே நோக்காக கொண்டு பெரும்பான்மையின மக்களை கொண்டுவந்து குடியேற்றி இனவிகிதாசாரத்தையும், இன சமத்துவத்தையும் அழிக்கும் நோக்கிலே மேற்கொள்ளப்படுகின்றது.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |