இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் வந்த கோவிட் தொற்று! உறுதிபடுத்தும் வைத்திய நிபுணர் (VIDEO)
இலங்கையில் முன்னைய உச்சகட்டங்களின் போது, வைத்தியசாலைகளில் கோவிட் வைரஸ் தொற்றுக்கு பயன்படுத்த மேலதிக படுக்கைகளைப் பெற்றுக்கொண்டதாகவும், தொற்றாளர் எண்ணிக்கை குறைந்தவுடன் குறித்த படுக்கைகள் விடுவிக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்திய நிபுணர், ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எவ்வாறாயினும், நாளாந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நிர்வகிக்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக வெளியாகும் தகவல்களை அவர் நிராகரித்துள்ளார்.
தேவை இருப்பின் மேலதிக படுக்கைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் 80 ஆயிரம் வைத்தியசாலை படுக்கைகள் காணப்படுவதாகவும், ஆகவே கோவிட் தொற்றாளர்களுக்கு மேலதிக படுக்கைகள் வழங்குவது குறித்து கவலையடையத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்துள்ள நிலையில், வைத்தியசாலைகளின் திறன் அல்லது அதிகாரிகளின் திறன் குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
தற்போது 63 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் கொவிட் நோயாளிகளால் பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கோவிட் நோயாளிகளுக்காக நாடு முழுவதும் தீவிர சிகிச்சைப் பிரிவு 70 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான பிராண வாயு போதுமான அளவு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய கோவிட் உச்ச நிலைகளின் போது, வைத்தியசாலைகளில் பிராண வாயு திறனை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும், ஆகவே நோயாளிகளுக்கு அதனை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேவையேற்படின், முன்னைய அலைகளின் போது செயற்பட்டமைக்கு அமைய பிராண வாயுவை
இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்திய
நிபுணர், ஹேமந்த ஹேரத் நாளாந்தம் இன்று உறுதியளித்துள்ளார்.