மட்டக்களப்பு அரசாங்க அதிபரிற்கும் பல்சமய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல் (Photos)
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிற்கும் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின்போது தற்போதைய நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப்பாதுகாப்பு, அத்தியாவசிய சேவைகள் உட்பட பலதரப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எட்டு விடயங்கள் அடங்கிய ஆலோசனை
தற்போதைய இடரான நெருக்கடியான சூழலிலே மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை எவ்வாறு முகங்கொடுத்து மக்களுக்குச் சுமுகமான சூழலை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பான எட்டு விடயங்கள் அடங்கி ஆலோசனைகளைக் குறித்த கலந்துரையாடலின்போது பல்சமயம் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் முன்வைத்திருந்தனர்.
குறித்த கலந்துரையாடலின் பேறாக எதிர்வரும் 07.06.2022 திகதி புதன்கிழமை, மாவட்டத்திலுள்ள துறைசார்ந்த அதிகாரிகளுடனான சந்திப்பொன்றிற்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்கால திட்டம்
அத்துடன் இதன் மூலம் எதிர்காலத்தில் மாவட்டத்தில் ஏற்பட இருக்கின்ற பொருளாதார நெருக்கடியுடன் கூடிய பிரச்சனைகளுக்கு முடியுமானவரைத் தீர்வினைப் பெறுவதோடு உணவுப் பாதுகாப்பு தொடர்பான சில சாத்தியமான செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்தக்கூடியதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த், உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட கரீட்டாஸ் எகெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி ஏ.யேசுதாசன் அடிகளார், மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள், மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் செயலாளர் அருட்பணி கே.ஜெகதாஸ், சர்வமத ஒன்றியத்தின் உபதலைவர் மௌழவி சாஜஹான் உள்ளிட்ட சர்வமத ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் இதன்போது கலந்து கொண்டிருந்தார்கள்.



