மருத்துவர்களின் ஓய்வு வயதில் திருத்தம்: வெளியானது வர்த்தமானி
மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயது தொடர்பில் வெளியான புதிய தகவல் மருத்துவர்களின் கட்டாய ஓய்வு வயதை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
திருத்தப்பட்டுள்ள வர்த்தமானி
அதன்படி, சிறப்பு மருத்துவ அலுவலகர், அரச மருத்துவ அலுவலகர், பல் அறுவை சிகிச்சை நிபுணர், அரசு பதிவு மருத்துவ அலுவலகர் ஆகிய பதவிகளின் கட்டாய ஓய்வு வயது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
திருத்தத்தின்படி, ஏற்கனவே 63 வயதை பூர்த்தி செய்த மருத்துவர்கள் டிசம்பர் 31ம் திகதிக்கு முன் ஓய்வு பெற வேண்டும்.
மேலும் தற்போது 62 வயது பூர்த்தியடைந்த மருத்துவர்கள் 63 வயது நிறைவடைந்ததும், 61 வயது பூர்த்தியடைந்த மருத்துவர்கள் 62 வயது பூர்த்தியடைந்ததும் ஓய்வுபெற வேண்டும்.
அடுத்த ஆண்டுவரை நடைமுறை
இதேவேளை 60 வயது பூர்த்தியடைந்த மருத்துவர்கள் 61 வயது நிறைவடைந்தவுடன் ஓய்வு பெற வேண்டும் என்றும், 59 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 60 வயது நிறைவடைந்தவுடன் ஓய்வு பெற வேண்டும் என்றும் புதிய திருத்தம் கூறுகிறது.
இருப்பினும், ஜனவரி முதலாம் திகதிக்கும் ஜூன் 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த மருத்துவர்களுக்கு, சம்பந்தப்பட்ட ஆண்டு ஜூன் 30ஆம் திகதி வரை பணிபுரிய வாய்ப்பு உள்ளது.
ஜூலை முதலாம் திகதிக்கும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த மருத்துவர்கள், சம்பந்தப்பட்ட ஆண்டின் டிசம்பர் 31 ஆம் திகதி வரை பணியாற்ற வாய்ப்பு உள்ளது.
இந்த திருத்தங்கள் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
