இது ராஜபக்ச ஆவிகள் பயமுறுத்தும் அரசாங்கம்: ரூபாவை போல் அரசாங்கமும் வீழ்ச்சியடையும் - ஹர்ச டி சில்வா
ரூபாவை மிதக்கவிடாது பிடித்துக்கொண்டிருந்ததை போன்று தற்போதைய அரசாங்கமும் பிடித்துக்கொண்டிருக்கின்றது எனவும் எனினும் உண்மையான மக்கள் ஆதரவு இல்லாத இந்த அரசாங்கம் ரூபா விழ்ச்சியடைந்தது போல் வீழ்ச்சியடையும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு பலமான மக்கள் ஆதரவு இருப்பதாக காட்டினாலும் உண்மையான நிலைமை அதுவல்ல. இது ராஜபக்சவினர் பயமுறுத்தும் அரசாங்கம் என்று கூறினால் அது தவறல்ல.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த பொருளாதார கொள்கை நோக்குடன் நான் இணங்குகிறேன். ஜனாதிபதியின் பொருளாதார கொள்கையை ஏற்றுக்கொள்கிறேன். இதனை கூற நான் பயப்பட தேவையில்லை.
இதனை கூற வெட்கப்பட வேண்டியதில்லை. எதிர்க்கட்சியில் இருந்தாலும் அதனை கூற என தெம்பு இருக்கின்றது. எவர் எதிரிலும் இதனை நான் கூறுவேன். நாம் நவீன இலங்கையை உருவாக்க வேண்டும்.
இதனால், இடைக்கால சர்வக்கட்சி வேலைத்திட்டத்திற்கு இணங்குவோம். நான் அமைச்சு பதவியை பெறுவதற்காக சர்வக்கட்சி அரசாங்கம் பற்றி பேசவில்லை. எனினும் தமது அணியினரை மாத்திரம் கொண்ட சர்வக்கட்சி அரசாங்கம் என்ற பெயர் பலகையுடன் செல்ல முயற்சிக்கின்றனர்.
மக்கள் போராட்டத்தில் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். உண்மையான சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும். அப்படி இல்லாது மக்கள் வீட்டுக்கு அனுப்புவதற்காக காத்திருப்போருடன் இணைந்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்கக்கூடாது.
இப்படி சென்றால், சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.