மன்னார் நகரசபைக்கு பல வருடங்களாக வாடகை செலுத்தாத அரச போக்குவரத்து சேவை
மன்னார் நகர சபைக்கு சொந்தமான பேருந்து நிலையத்திற்கு செலுத்த வேண்டிய வாடகை நிலுவையையும், மாதாந்த வாடகையும் மன்னார் அரச போக்குவரத்து சேவையினர் உரிய முறையில் செலுத்தாமையினால் மன்னார் நகரசபைக்கு பல இலட்சம் ரூபா வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் நகர சபை தெரிவித்துள்ளது.
மேற்படி மன்னார் நகர சபையால் நிர்வகிக்கப்படும் மன்னார் பிரதான பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரச போக்குவரத்து பேருந்துகள் இணைந்த சேவையை வழங்கி வருகின்றனர்.
மன்னார் நகர சபையினால் பேருந்து தரிப்பிட கட்டணம் மற்றும் சிற்றூழியர்கள் காவலாளிக்கான செலவில் பங்களிப்பு செலுத்தும் வகையில் தனியார் போக்குவரத்து சேவை மற்றும் அரச போக்குவரத்து சேவையினருக்கு மாதந்த வாடகையாக 50,000 ரூபா செலுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
நகரசபைக்கு வாடகை கட்டணம் செலுத்தாத அரச பேரூந்து சேவை
இந்நிலையில், தனியார் பேருந்து சேவையினர் இரண்டு வருடங்களாக உரிய காலப்பகுதியில் நகரசபைக்கு வாடகை கட்டணத்தை செலுத்தி வருகின்ற நிலையில், அரச பேரூந்து சேவையினர் மாத்திரம் இரண்டு வருடங்களாக எந்த ஒரு கட்டணமும் செலுத்த வில்லை என்பதுடன் முன்னைய நாட்களில் செலுத்த வேண்டிய பணத்தையும் செலுத்தவில்லை.
குறித்த கட்டணத்தை செலுத்துவது தொடர்பாக பலமுறை மன்னார் பேருந்து சாலைக்கு கடிதங்கள் நகர சபையால் அனுப்பப்பட்ட போதிலும் கட்டண நிர்ணயத்தை மீன் பரிசீலிப்பது தொடர்பாக கலந்துரையாடலுக்கு மன்னார் அரச போக்குவரத்து சபையை அழைத்தும் அவர்கள் அழைப்பையும் கட்டணம் செலுத்துவதையும் உதாசீனப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த மன்னார் நகரசபை அமர்வில் உரிய வாடகை பணத்தை செலுத்த மன்னார் அரச பேருந்து சேவையினர் தவறினால் நகரசபை பேருந்து நிலையத்தில் அவர்கள் சேவையை தொடர்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதற்கான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அனைத்து போக்குவரத்து இடையூறுகளுக்கு மன்னார்
அரச போக்குவரத்து சேவையினரே பொறுப்பு ஏற்க வேண்டும் என மன்னார் நகர சபையினர்
தெரிவித்துள்ளனர்.