தமிழ் மக்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்க மாட்டோம்: ஆளும் தரப்பு உறுதி
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் நிச்சயம் மாற்றம் வரும் என்ற தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்க மாட்டோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(09.10.2025) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இந்த நாட்டில் கடந்த 76 வருடகால அரசியலானது மேட்டுக்குடிகள், தனவந்தர்களுக்கு மட்டுமே சொந்தமான அரசியலாக இருந்துவந்தது. இவர்களின் தாளத்துக்கேற்பவே அரசியல்வாதிகள் ஆட்டம் போட்டனர், ஆட்டுவிக்கப்பட்டனர்.
உறுதிமொழிகள்
இந்நிலைமையை நாம் மாற்றியமைத்துள்ளோம். மேட்டுக்குடிகள் மற்றும் உயர் வர்க்கம் வசமிருந்த அரசியல், சாதாரண மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எனவே, மக்களை மதிக்கின்ற, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற, உறுதிமொழிகளுக்கு செயல் வடிவம் கொடுக்கின்ற அரசாங்கமாகவே தேசிய மக்கள் சக்தி திகழ்கின்றது.
ஆகவே, இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மக்கள் முன்வரமாட்டார்கள். மாறாக அரசாங்கத்தின் பின்னால் அணிதிரண்டு அதன் பயணத்தை வலுப்படுத்தி வருகின்றனர். இற்றைக்கு ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த நாடு எந்நிலையில் இருந்தது?
மக்கள் மத்தியில் நம்பிக்கை
பல சவால்களுக்கு மத்தியில் நாட்டை மீட்டுள்ளோம். பொருளாதாரத்தை வளப்படுத்தி வருகின்றோம். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் சுதந்திரமாக நாடு திரும்புவதற்குரிய சூழ்நிலை நிலவுகின்றது.

இனவாத மற்றும் மதவாத அரசியலுக்கும் முடிவுகட்டப்பட்டுள்ளது. எனவே, கடந்த ஒரு வருடத்தில் நாம் கடந்து வந்த பாதை மகிழ்ச்சியளிக்கின்றது. யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச விளையாட்டு மைதானம் கூட நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. வடக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களின் வாழ்க்கை மேம்பட்டு வருகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri