பொதுத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயார்: காஞ்சன விஜேசேகர பதில்
ஜனாதிபதித் தேர்தல் அல்லது பிரதேச சபைத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சி கோருவதாகவும் அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்த தயாராகவே இருப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ( Kanchana Wijesekara) தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் முறைவாசிப்பின் மீதான 7வது நாள் விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் தவறாக இருந்தால், மக்களின் நலன் கருதி அவற்றை திரும்ப பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். சுற்றுலாத்துறை மூலமே நாட்டுக்கு பணத்தை கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார்.
சுற்றுலாத்துறைக்காக முயற்சி எடுத்த போது, நாட்டை ஆய்வு கூடமாக மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறினர். ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து சுற்றுலாத்துறையை ஆரம்பிக்க முயற்சித்த போது, அதனை கடுமையாக விமர்சித்தனர்.
முதலீட்டாளர்களை வரவழைத்த போதும் அதனை கடுமையாக விமர்சித்து எதிர்த்தனர். துறைமுக நகரம் குறித்து தவறான கருத்தை உருவாக்கினர். எமது சிறந்த வருவாய் கிடைக்கும் வழிகளாக இருந்த விமான நிலையங்கள், துறைமுகங்கள் மூலம் கிடைக்கவிருந்த வருமானத்திற்கு நீங்கள் தடைகளை ஏற்படுத்தினீர்கள்.
நாட்டில் வருமானத்தை உற்பத்தி செய்யும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கினர். அன்று பொருளாதார மையங்களை ஏலமிட்டனர்.
அன்று மத்தள விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தினர். நாங்கள் தீர்மானம் ஒன்றை எடுத்தால், அந்த தீர்மானம் மக்களுக்கு ஏற்றாக இல்லை என்றால், அதனை திரும்ப பெற அரசாங்கம் தயங்காது.
ஜனாதிபதி தேவையான நேரத்தில், தேவையான தீர்மானங்களை எடுப்பார். வரவு செலவுத்திட்டத்தில் அனைத்து துறைகளும் அடங்கும் வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபைத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறும் கூறுகிறார்.
நாம் பொதுத் தேர்தலை நடத்துவோம். நாங்கள் அதற்கு தயார். இரண்டு வருடங்களின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும். நாட்டில் இந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி விட்டு. நாம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்வோம் எனவும் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.