பசில் ராஜபக்சவை வரவேற்க சென்றவர்களுக்கு சிற்றுண்டி-கட்டணத்தை செலுத்திய அரசாங்கம்
அமெரிக்காவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு அதிதிகள் வருகை தரும் முனையம் ஊடாக வருகை தந்தார்.
அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தவர்களுக்கான உபசரிப்பு செலவு உட்பட சிறப்பு அதிதிகளுக்கான வரவேற்பறையின் சேவைகளுக்காக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை அரசாங்கம் செலுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
வரவேற்க சென்றவர்களுக்கு பரிமாறப்பட்ட சிற்றுண்டிகள்
இதனடிப்படையில், சிவில் விமான சேவைகள் அதிகார சபை 60 ஆயிரம் ரூபா பணத்தை நேற்று முன்தினம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேட்ரிங் சர்விசஸ் நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை வரவேற்க அவரது முக்கிய ஆதரவாளர்களான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் 100 பேர் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
இவர்களுக்கு ஸ்ரீலங்கன் கேட்ரிங் சர்விசஸ் நிறுவனம் சிற்றுண்டிகளை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து சிவில் விமான சேவைகள் அதிகார சபை அதற்கான பணத்தை செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.