மனச்சாட்சியுள்ள உறுப்புரிமை நாடுகள் பிரேரணையை எதிர்த்தே ஆக வேண்டும் - இலங்கை அரசு கோரிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை மனச்சாட்சிக்கு விரோதமானது. எமது நாட்டை ஏதோவொரு வகையில் பழிவாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மனச்சாட்சியுள்ள உறுப்புரிமை நாடுகள் இலங்கை மீதான பிரேரணையை எதிர்க்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணை மீது வாக்கெடுப்பு நாளை நடைபெறுகின்றது.
இதுதொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவு வழங்கி பிரேரணையைத் தோற்கடிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். நாமும் பல நாடுகளின் முக்கியஸ்தர்களுடன் சந்திப்புக்களை நடத்தி பிரேரணையின் உள் நோக்கத்தையும், எமது நிலைப்பாட்டையும் எடுத்துரைத்திருந்தோம்.
எனவே, மனச்சாட்சியுள்ள நாடுகள் இலங்கை மீதான பிரேரணையை எதிர்க்க வேண்டும்.இலங்கை அனைத்து நாடுகளுடனும் ஒன்றிணைந்து பயணிக்கவே விரும்புகின்றது.
ஆனால்,சில நாடுகள் எமது நாட்டை ஏதோவொரு வகையில் பழிவாங்கும் வகையில் செயற்படுகின்றன.ஆனால், நாம் மனச்சாட்சியின் பிரகாரம் செயற்படுகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
