முரண்பாடான புள்ளிவிபரங்கள் - பல விடயங்களை சுட்டிக்காட்டுகிறார் ரவி குமுதேஷ்
நாட்டில் கோவிட் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ள விடயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை வைத்திய ஆய்வுக்கூட விஞ்ஞான கல்லூரி வலியுறுத்தியுள்ளது.
தினமும் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் அவ்வாறான ஒரு நிலைமை இல்லையென்ற தீர்மானத்திற்கு வரமுடியும் என அந்த அமைப்பின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.
எனினும் கடந்த நாட்களில் செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை பார்த்தால் அவ்வாறான ஒரு நிலைமை இல்லையென்றே கருத வேண்டியுள்ளது.
புள்ளிவிபரங்களும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக காணப்படுகின்றது. இது தொடர்பில் சுகாதார அமைச்சர் அவதானம் செலுத்த வேண்டும்.
நாட்டில் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது. ஒரு இலட்சத்து மூவாயிரத்து 600 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நாடு என்ற வகையில் நாம் ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளோம்.
இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைய இந்த எண்ணிக்கையை நாம் கணிப்பிட்டுள்ளோம். எனினும் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இன்னமும் 97ஆயிரம் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவே தெரிவிக்கின்றது.
இங்கேயும் புள்ளிவிபரங்களில் முரண்பாடு காணப்படுகின்றது. ஆகவே எதனை நாம் நம்புவது என்ற பிரச்சினை எழுந்துள்ளது.
கோவிட் தொற்று ஏற்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், தகவல்களை முகாமைப்படுத்துவதற்கு இதுவரை சரியான திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.