அரசாங்கம் மனித உரிமை செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
மனித உரிமை குறித்து கரிசனை கொள்ளும் தரப்பினருக்கு நிதி உதவிகள் கிடைக்கப் பெறுவதனை இலங்கை அரசாங்கம் தடுக்கின்றது என மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் முனைப்பு காட்டும் தரப்புக்களுக்கு கிடைக்கப்பெறும் வெளிநாட்டு உதவிகளை முடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளினால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்காக குரல் கொடுக்கும் தரப்பினர், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தரப்புக்களை தொடர்ச்சியாக துன்புறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆண்டறிக்கையிலே இவ் விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிவில் சமூக செயற்பாடுகளில் இலங்கை இராணுவம் தலையீடு செய்து வருவதாகவும், பயங்கரவாத விசாரணைப் பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் மனித உரிமை அலுவலகங்களுக்கு அடிக்கடி செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சில சந்தேக நபர்கள் வழக்கு விசாரணைகளுக்கு முன்னதாகவே நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களை தடுத்து வைத்து விசாரணை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கருத்துச் சுதந்திரத்தை அரசாங்கம் முடக்குவதாகவும் மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும், கோவிட் பெருந்தொற்று குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும் அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.