அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கையை வழங்க அரசு தவறியுள்ளது!சுரேஷ் குற்றச்சாட்டு
அனர்த்தம் தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே கிடைத்த நிலையிலும் அது தொடர்பாக மக்களுக்கு முன்னெச்சரிக்கை வழங்குவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சூறாவளி அனர்த்தத்திற்கு முன்பாகவே அது தொடர்பான சம்பந்தப்பட்ட தரப்பினரின் அறிவிப்புகளும், யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற் துறை பேராசிரியரின் அறிவிப்புகளும் வெளிவந்திருந்தன.
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளதால் முற்கூட்டியே பல விடயங்கள் அறியக் கிடைக்கின்றன.
குற்றச்சாட்டு
இந்த அனர்த்தத்திலிருந்து உயிர்கள், உடைமைகளை காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கமே எடுக்கவில்லை. அரசாங்கத்திடம் சகல வசதி வாய்ப்புகளும் இருக்கின்றன.ஆகவே அவர்கள் விரும்பிய அனைத்தையும் செய்திருக்க முடியும்.

இவ்வாறு இருக்கையில் அவர்கள் அதனை சரிவர செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மேல் உள்ளது.
அரசாங்கத்தின் மேல் குற்றம் சாட்டுவதற்கு அப்பால், எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறும்போது எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி இவ்வாறான விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.
நடவடிக்கை
மண் சரிவு ஏற்படக்கூடிய மலைநாட்டில் உள்ள மக்களுக்கு நிரந்தரமான, சரியான மாற்று இடங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

ஏனெனில் ஏற்கனவே ஏற்பட்ட மண் சரிவுகளில்கூட பல மக்கள் உயிரிழந்திருக்கின்றார்கள்.மண் சரிவுகள் ஏற்படக்கூடிய பகுதிகள் என பல பகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன.
கிராமம் கிராமமாக மக்கள் மண்ணுள் புதையுண்டு உள்ளார்கள். இவ்வாறான நிலைமை ஏற்பட்டதும் பிழை, இனிமேலும் ஏற்படாமல் அரசாங்கம் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தேவையை இந்த அழிவுகள் உணர்த்தி நிற்கின்றது என்றுதான் நான் கருதுகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.