மக்களின் காணிகளை திருடும் அரச திணைக்களங்கள்: துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டு
முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப்பகுதிகளில், வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மக்களின் காணிகளை திருடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(12.03.2025) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2009ஆம் ஆண்டு வரை வனவளத்திணைக்களமும், வனஜீவராசிகள் திணைக்களமும், இங்கு எமது இடத்தில் இருக்கவில்லை. ஆனாலும் விடுதலைப் புலிகளின் வனவளப்பிரிவு இருந்தது.
சூறையாடப்பட்ட காடுகள்
இயற்கையை நேசித்த வன்னியர்களின் வாழ்க்கைமுறை இருந்தது. இதனால் வனப்பகுதிகள் அழிக்கப்படவில்லை. காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் வெட்டு மரங்களாகவும், விறகுத்தேவைகளுக்காகவும் பெருநகரங்களை நோக்கி ஏற்றிச்செல்லப்படவில்லை. காடுகள் மிகவும் கவனமாக காவல் செய்யப்பட்டன.
கடந்த 2010ஆம் ஆண்டிலும் அதன்பின்னரும்தான் வனவளத்திணைக்களத்தினதும், வனஜீவராசிகள் திணைக்களத்தினதும், நிர்வாகம் இங்கு நிலைநிறுத்தப்பட்டது. இதன் பின்னர்தான் வன்னிப்பெருநிலப் பரப்பின் காடுகள் சூறையாடப்பட்டன.
மன்னாரில் முசலி உட்பட குறிப்பிட்ட சில இடங்களிலும், வவுனியாவில் பம்பைமடு உள்ளிட்ட சிலகுறிப்பிட்ட இடங்களிலும் அடர்காடுகள், ஒதுக்கப்பட்ட வனப்பகுதிகள் ஈவுஇரக்கமற்று கனகரக இயந்திரங்களால் மூர்க்கத்தனமாக சிதைக்கப்பட்டன. இவைகள் வனவளத்திணைக்களத்தின் அபகரிப்புக்கள் அல்லது, திருட்டுக்களாகவே கருதப்படவேண்டும்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |