மாகாண சபைகளை எதிர்க்கின்றேன் - அரசாங்கம் தேர்தலை நடத்தினால் அதனை எதிர்க்க முடியாது! - சரத் வீரசேகர
மாகாண சபை முறையை தாம் ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருவதாகவும் எனினும் அரசாங்கம் என்ற வகையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால், தன்னால் அதனை எதிர்க்க முடியாது எனவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மாகாண சபைகளை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருகிறேன். தற்போதும் எதிர்க்கின்றேன். எதிர்காலத்திலும் எதிர்ப்பேன். இது எனது தனிப்பட்ட நிலைப்பாடு.
மாகாண சபைத் தேர்தலை நடத்தினால், அது அரசாங்கம் செய்யும் நடவடிக்கை. அரசாங்கம் செய்வதை தனி நபரால் எதிர்க்க முடியாது. எனினும் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை.
மாகாண சபைகள் தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன். இது எனது தனிப்பட்ட நிலைப்பாடு. ஒரு நாடு ஒரு சட்டம் என்றால், ஒன்பது மாகாணங்களில் ஒன்பது சட்டங்கள் இருக்க முடியாது.
தனிமைப்பட்ட நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் நாங்கள் கூட்டாக எடுக்கும் தீர்மானங்கள் இருக்கின்றன. நாங்கள் அப்போது பார்த்துக்கொள்வோம். எப்போது, எப்படி மாகாண சபைத் தேர்தல் நடக்கும் என்ற தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.