அலைக்கழிக்கும் அரச பேருந்தால் மருதங்கேணியில் மக்கள் குழப்பம்
பருத்தித்துறையில் இருந்து 8.30 மணியளவில் மருதங்கேணிக்கு வருகை தரும் அரச பேருந்து மக்களை நீண்ட நேரம் காக்கவைத்து அலைக்கழிப்பது தொடர்பாக மருதங்கேணியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(26.01.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறுகல் நிலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பருத்தித்துறையிலிருந்து கேவில் நோக்கி காலை 8.30 மணியளவில் புறப்படும் அரச பேருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு மருதங்கேணி பகுதிக்கு வருகை தந்து அங்கே 40 நிமிடங்களுக்கு மேலாக மேலதிகமாக தரித்து நிற்கின்றது.

இதனால் உரிய நேரத்துக்கு செல்ல வேண்டிய மக்கள், வேலை ஆட்கள், மாணவர்கள் பாதிப்படைகின்றனர்.
மக்களின் கோரிக்கை
குறித்த அரச பேருந்தானது, அதிக நேரம் காத்திருப்பதால் ஏனைய பேருந்துகள் மற்றும் ஆட்டோ சாரதிகள் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரத்தை கடைப்பிடிக்காமல் தான்தோன்றித்தனமாக மக்களை அலைக்கழிக்கும் அரச பேருந்து மீது நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை போக்குவரத்து சபை இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் பயணிகள் பலமுறை கேட்டுக் கொண்டனர்.

ஆனால் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இன்றும் அதே அரச பேருந்து மருதங்கேணி பகுதியில் பல நிமிடங்கள் தரித்து நின்றதால் மக்கள் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், வடமராட்சி கிழக்கின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேரம் தாமதம்
இதேவேளை, யாழ்ப்பாணம் - பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபையினர் தமது பேருந்து சேவைகளை சீராக மேற்கொள்ளாமையினால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நேற்று(24.01.2026) பருத்தித்துறை 750 வளித்தடத்தில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6:00 மணிக்கு பருத்தித்துறை நோக்கி வரவேண்டிய பேருந்து 6:50 மணிக்கு தனது சேவையை தொடர்ந்ததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு விசனங்கள் மக்களால் முன்வைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam