எரிவாயு விலைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
சர்வதேச LPG விலைகளில் ஏற்பட்ட கடுமையான உயர்வைத் தொடர்ந்தே உள்நாட்டு எரிவாயு விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று (07.04.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உலகளாவிய எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளதால், உள்ளூர் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. விலைகள் அதிகரித்துள்ள போதிலும், தற்போதைய இறக்குமதி ஏற்பாட்டின் கீழ் நாட்டிற்கான எரிவாயு விநியோகம் தடையின்றி தொடர்கிறது.
அரசாங்கத்தின் புதிய டெண்டர் முறையானது, முந்தைய மத்திய கிழக்கு விநியோகஸ்தர்களுக்குப் பதிலாக, LPGயை முதன்மையாக அமெரிக்கா (80%) மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து (20%) பெறுகிறது.

வரையறுக்கப்பட்ட சேமிப்புத் திறன்
இலங்கையில் உள்ள வரையறுக்கப்பட்ட சேமிப்புத் திறன், அதிக இறக்குமதி மற்றும் கையாளுதல் செலவுகளுக்கு வழிவகுத்துள்ளது. போதுமான உள்நாட்டு சேமிப்பு வசதி இல்லாததால், எரிவாயு இலங்கைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு தற்காலிகமாக மாலைத்தீவில் சேமிக்கப்படுகிறது.
மேலும் இறக்குமதிகள் ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு ஒருமுறை வந்து சேர்கின்றன. இந்த போக்குவரத்து ஏற்பாடுகள் ஒட்டுமொத்த செலவுச் சுமையை அதிகரித்துள்ளது என்றுள்ளார்.