இந்து சமுத்திர நாடுகளின் மாநாடு : ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் ஜனாதிபதி கோட்டாபய
இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் மாநாட்டின் ஆரம்பக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (G.L.Peiris) இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு இந்து சமுத்திர நாடுகளின் மாநாட்டின் ஆரம்ப கூட்டத் தொடரில் உரையாற்ற அழைப்பு கிடைத்துள்ளது. இந்த மாநாடு ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் தலைநகரமான அபுதாபியில் நடைபெறுகிறது.
47 நாடுகள் இந்த சர்வதேச மாநாட்டில் கலந்துக்கொள்கின்றன. டிசம்பர் 4 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்ற உள்ளதுடன் அவர் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் தலைவர் இளவரசர் அல் நாயனுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்த மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக இலங்கை அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இருப்பதுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், ஓமான் வெளிவிவகார அமைச்சர், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பீ.பாலகிருஷ்ணன், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் ஆகியோர் பிரதித் தலைவர்களாக கடமையாற்றுகின்றனர்.
சுற்றாடல், பொருளாதாரம் மற்றும் தொற்று நோய் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.