கோட்டாபய முன்னாள் ஜனாதிபதிக்கான சிறப்புரிமையின் கீழ் வாழ்கிறார்:பந்துல குணவர்தன
கோட்டாபாய ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமையின் கீழ் வாழ்ந்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பிரத்தியேக விமானத்தில் தாய்லாந்து சென்ற கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரல் இருந்து தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக் செல்ல பிரத்தியோக விமானத்தை பயன்படுத்தியதாகவும் அதற்கான கட்டத்தை இலங்கை அரசு செலுத்தியதாகவும் ஊடகவியலாளர் ஒருவர் இதன் போது கூறினார்.
அப்படியானால், முன்னாள் ஜனாதிபதி சிறப்புரிமையின் கீழ் வாழ்ந்து வருகிறாரா என அவர் கேள்வி எழுப்பினார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சிறப்புரிமைகள் உள்ளன
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன, ஆமாம். இலங்கை ஜனாதிபதித் தேர்தல் சட்டத்திற்கு அமைய நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கும் ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதிக்கும் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் தொடர்பான சட்ட விதிமுறைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
நான் அறிந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் உயிரிழந்தால், அதன் பின்னர் அவரது மனைவிக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் பொறுப்பு உள்ளது.
காலஞ்சென்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவுக்கும் அந்த உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக நான் அறிகிறேன்.
அது தொடர்பாக எதிர்காலத்தில் விரிவாக பார்க்க முடியும் எனக் கூறியுள்ளார்.