கோட்டாபயவின் தோல்வியால் வீழ்ச்சியடைந்த இலங்கை: சபையில் முழங்கிய லக்ஷ்மன் கிரியெல்ல - அமைதியான ஆளும் தரப்பு
ஜனாதிபதியின் தோல்வியான தீர்மானங்களே நாடு தற்போது எதிர்நோக்கி இருக்கும் தோல்வியான நிலைமைக்கு காரணம். இதனால், நாடு வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என்று எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
ஜனாதிபதிக்கு எதிராக வழக்குகளில் நேர்நிலையானவர்கள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவது கேலிக்குரியது. அவ்வாறு செய்யாது, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் யோசனை முன்வைத்துள்ளார்.
அனைத்து நியமனங்களையும் ஜனாதிபதி வழங்குவதாலேயே தற்போதைய அரசாங்கம் அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது. 20வது அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் மீண்டும் ஜனாதிபதிக்கு அதிகாரங்களை வழங்கியதே இதற்கு காரணமாக அமைந்தது.
ஜனாதிபதி, எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களிடம் மாத்திரமல்ல, அரசாங்கத்தை சேர்ந்த எவருடனும் கலந்துரையாடாது தீர்மானங்களை எடுப்பது நாடு தோல்வியை நோக்கி செல்லக் காரணம்.
எமது அரசாங்கத்தின் கீழ் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை உருவாக்கிய போது, அன்று எதிர்க்கட்சியினரின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.
19வது திருத்தச் சட்டத்திற்கு அன்று எதிர்க்கட்சியில் இருந்த தினேஷ் குணவர்தன திருத்தங்களை சேர்த்தார். ஜனாதிபதியின் தோல்வியான தீர்மானங்களே நாடு தற்போது எதிர்நோக்கி இருக்கும் தோல்வியான நிலைமைக்கு காரணம். இதனால், நாடு வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்க வேண்டும் எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் லக்ஷ்மன் கிரியெல்ல ஜனாதிபதியை விமர்சித்து இவ்வாறு உரையாற்றிய பொழுது, ஆளும் கட்சியினர் எவரும் அதற்கு தடையேற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.