நாடு ஸ்தம்பித்துள்ள நிலையில் இன்று ஜனாதிபதி மாளிகையில் முக்கிய சந்திப்பு
ஜனாதிபதியையும், பிரதமரையும் பதவி விலக கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள் ஸ்தம்பித்துள்ளன.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் முக்கிய சந்திப்பொன்று நடத்தப்படவுள்ளது.
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் நடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தும் முகமாக நாளை முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் அரசாங்கத்தில் உள்ள சகல கட்சிகளுக்கும் விசேட கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நாடாளுமன்ற குழுவின் விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடுவதே இந்த கலந்துரையாடலின் பிரதான நோக்கமாகும் என தெரியவருவதுடன், அடுத்த வார நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...