மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் ஞானசார தேரர்: சிறீதரன் எம்.பி சீற்றம்
விளக்கேற்றக் கேட்கும் தமிழ் அரசியல்வாதிகள் போதைப்பொருளைத் தடுப்பதற்குத் தயாராக இல்லை எனவும், நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதிகள் என்ன செய்கின்றார்கள் என கலகொட அத்தே ஞானசார தேரர் (Galagoda Aththe Ganasara Thero) தெரிவித்த கருத்து மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாக அமைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sivaganam Sritharan) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் 'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணியின் தலைவர் தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்துரைக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நீதிமன்றத்தை மதிக்கத் தெரியாது, இந்த நாட்டின் நீதித்துறையையே அவமதித்த மிலேச்சத்தனமான இனவாதியான ஞானசார தேரர், போதைப்பொருள் ஒழிப்பு குறித்துப் பேசுவது நகைப்புக்கிடமானதாக உள்ளது.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு, கிழக்கில் 2009 ஆம் ஆண்டுவரை போதைப்பொருள், கஞ்சா, ஹெரோயின் என்ற சொற்பதங்களையே அறியாதவர்களாகத்தான் தமிழ் இளைஞர்கள் இருந்தார்கள். அந்தளவுக்குத் தனிமனித ஒழுக்கத்திற்கு விடுதலைப்புலிகள் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
அத்தகைய கட்டமைக்கப்பட்ட ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டு வாழ்ந்த தமிழ் இளைஞர்களைத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் நோக்கோடு, இன அழிப்பின் இன்னோர் வடிவமாக, அவர்களைப் போதைக்கு அடிமையாக்கி இனத்தைச் சீரழிக்கும் கைங்கரியத்தை திட்டமிட்டவகையில் கையாளும் ஞானசாரதேரர் போன்றோர் போதைப்பொருள் தடுப்புகுறித்து பேசுவதும், அதனோடு மாவீரர்களை நினைவேந்துவதை ஒப்புநோக்குவதும் பொருந்தாத செயலாகும்.
மாவீரர்களை நினைவேந்துவது தமிழர்களின் உயிர்ப்போடும், உணர்வோடும், கலாச்சார மறப்பியல்புகளோடும் இரண்டறக் கலந்த நிகழ்வு. அந்த நினைவேந்தலுக்கான உரிமை மறுக்கப்படுகிறபோது அதற்கெதிராக குரல் கொடுப்பதென்பது தன்னியல்பு.
எமது உரிமைக் கோரிக்கைக்குச் செவிசாய்க்கவே தயாராயில்லாத, எந்நேரமும் இனவாதத்தைக் கக்கும் ஞானசாரதேரரின் இத்தகைய கருத்து, அதிலும் குறிப்பாக மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளில் அவர் தெரிவித்துள்ள இக்கருத்து தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப்பார்ப்பதாகவே அமைந்துள்ளது.
தென்னிலங்கையிலிருந்த தமிழர்களின் தொல்லியல் அடையாளங்களை இடித்தழித்துவிட்டு, தமிழர்களின் பூர்வீக நிலங்களான வெடுக்கு நாறி மலையிலும், குருந்தூர் மலையிலும், உருத்திரபுரீஸ்வரத்திலும் பௌத்த சிங்கள அடையாளங்களை நிறுவுவதற்காகக் கங்கணம் கட்டி நிற்கும் ஞானசார தேரரை 'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணியின் தலைவராக நியமித்தமை இந்த நாட்டிற்கே அவமானம்.
அந்த நியமனமே இலங்கை
அரசின் இனவாத முகத்தை எண்பிப்பதற்கு போதுமான சாட்சியம் ஆகும். நாட்டின்
நீதித்துறைக்குக் கட்டுப்பட்டு நடக்கத் தெரியாத ஞானசார தேரருக்கு மாவீரர்களை
நினைவேந்துவது குறித்தோ, தமிழ் அரசியல்வாதிகள் குறித்தோ கருத்துரைப்பதற்கு
எந்த அருகதையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 10 மணி நேரம் முன்
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri