ஞானசார தேரரின் நியமனம் கண்டிக்கத்தக்கது: நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரப்
ஞானசார தேரரின் நியமனம் கண்டிக்கத்தக்கது என.திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்(S. M. M. Muszhaaraff) தெரிவித்துள்ளார்.
அவர் இன்று(27) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர்(Galagoda Aththe Ganasara) நியமிக்கப்பட்டுள்ளமை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையானது தேரர் குறித்து நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கின்ற அதேவேளை நீதிமன்றத்தை அவமதித்த குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை பெற்ற ஒருவரே ஞானசார தேரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டுமன்றி ஞானசார தேரர் இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பாகத் தொடர்ச்சியான வெறுப்புப் பிரச்சாரகராகத் தொழிற்பட்டு வரும் ஒருவர்.
அவ்வாறான
ஒருவர் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான செயலணிக்கு தலைமை தாங்க எந்த
விதத்திலும் பொருத்தமற்றவர். ஜனாதிபதியின் இந்த நியமனம் பொருத்தமற்றதும்
கண்டனத்திற்கும் உரியது என குறிப்பிடப்பட்டுள்ளது.