நீண்ட காலமாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு வழங்குங்கள் - பொது ஊழியர் சங்கம்
கல்விசாரா ஊழியர்களின் சேவைக்காலத்தினை அடிப்படையாகக்கொண்டு பதவி உயர்வு வழங்குங்கள் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் இணைத்தலைவர் ஆறுமுகம் புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் அதி உயர் பீடத்தில் உள்ள உறுப்பினர்கள் நேற்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர். இதன்போது,வட கிழக்கு மாகாணங்களில் அரச திணைக்களங்களில் ஆளணி நீண்ட காலமாக நிரப்பப்படாது இருப்பது தொடர்பில் அவரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
அதனை வலியுறுத்தி கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்திருந்தோம். அதனடிப்படையில் வட கிழக்கில் அரச திணைக்களங்களிலே வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் நீண்டகாலமாக இருந்துகொண்டிருக்கின்றது.
அங்கு காணப்படும் வெற்றிடங்களிற்கு எவ்வளவு கூடிய விரைவில் நிரப்புமாறு கூறியிருந்தோம். அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் கல்விசாரா ஊழியர்கள் வருடமாக 2013ம் ஆண்டு நியமனம் வழங்கியிருந்தார்கள். கல்வி திணைக்களத்தினால் 8 வருடங்களாக அவர்களிற்கான பதவி உறுதிப்படுத்தப்படவில்லை.
8ம் ஆண்டு கல்வி தகைமையுடன் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் சாதாரண தரச் சான்றிதழ்கள் கோரியுள்ளமையால் சிலருக்கு பணிநிலை உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை. அதனையும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். உள்ளுராட்சி மன்றங்களிலும் வெற்றிடங்கள் காணப்படுவதுடன், பதவி நிலைகள் உயர்த்தப்படாமலும் காணப்படுகின்றது.
இந்த நிலையில் வீதி தொழிலாளர்கள், சுகாதார தொழிலாளர்களை மேற்பார்வை செய்வதற்கான பணிநிலை வெற்றிடத்திற்கு வெளியிலிருந்து ஆட்சேர்ப்புக்கு கோரியுள்ளனர். நீண்ட காலமாக பணிபுரியும் அவர்களிற்கே குறித்த பணிநிலை வழங்கப்பட வேண்டும். அதற்குக் கல்வி, தராதரம் பார்க்காது அவர்களிற்குப் பதவி உயர்வினை வழங்க வேண்டும்.
பணியில் உள்ளவர்களிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அரச திணைக்களங்களிற்கான இடமாற்றங்களை மேற்கொள்வதற்கான கட்டமைப்பு உள்ளது. இடமாற்ற சபையில் 2019ம் ஆண்டு வரை அந்த இடமாற்ற சபைக்கு நாங்கள் போயிருக்கிறோம்.
ஆனால் மீண்டும் சில வருடங்களாக எங்களை அங்கு கூப்பிடப்படவில்லை. தொழிற்சங்கங்களை வைத்து கொண்டுதான் இடமாற்ற சபை தீர்மானிக்க வேண்டும். அந்த விடயத்தினையும் அமைச்சரிடம் நாங்கள் வலியுறுத்திக் கூறியிருக்கின்றோம்.
குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம செயலாளருடன் எமது தொழிற்சங்கம் பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அமைச்சர் இணங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உள்ளுராட்சி மன்றங்களில் பணி புரிபவர்களிற்கு அரச வேலைவாய்ப்பு திட்டத்தில் வழங்குவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெற்றிடத்திற்கு ஏற்ற வகையில் ஆளணி தரப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனாலும் 2018ம் ஆண்டுக்குப் பின்னர் சேவையில் இணைந்தவர்களைக் குறித்த வேலைவாய்ப்பிற்குள் இணைப்பதற்கான தீர்மானம் அவர்களிடம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஆனாலும் 2018ம் ஆண்டுக்குப் பின்னர் இணைந்தவர்களையும் வேலைவாய்ப்புக்குள் இணைத்துக்கொள்ளுமாறும் நாங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளோம் எனவும் அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.