16 வயது சிறுமியை தவறானமுறைக்குட்படுத்தியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தவறானமுறைக்குட்படுத்தி குற்றவாளிக்கு 10வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியால் குறித்த தீர்ப்பு (02) வழங்கப்பட்டுள்ளது.
கடூழிய சிறை
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை தவறானமுறைக்குட்படுத்தியதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரினால் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தண்டனைச் சட்டக் கோவை 364 (02) உப பிரிவு மற்றும் 436 பிரிவுகளின் அடிப்படையில் குறித்த நபருக்கு எதிராக வழக்கு இடம்பெற்று வந்தது.
ஐந்து குற்றச்சாட்டுகள்
இதனடிப்படையில் குறித்த வழக்கின் சந்தேக நபரான சேருநுவர-தெஹிவத்தை பகுதியில் வசித்து வரும் ரன்கொத் பேடிகே உதார பெதும் (26வயது) என்ற சந்தேக நபர் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில் ஐந்து குற்றச்சாட்டுகளும் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது.
குறித்த வழக்கில் திருகோணமலை மேல் நீதிமன்ற அரச சட்டவாதி தர்ஷிகா திருக்குமாரநாதன் முன்னிலையாகி இருந்தார்.
இதேவேளை குறித்த வழக்கின் தீர்ப்பினை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டியதுடன் 2000 ரூபாய் தண்டப்பணமாக செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்துமாறும் நீதிபதி கட்டளை பிறப்பித்தார்.



