நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி பாதுகாக்கப்பட வேண்டும்! கெவிந்து குமாரதுங்க எம்.பி
மாகாணசபைகளைப் பாதுகாத்து அதனை முன்கொண்டு செல்வதாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி பாதுகாக்கப்பட வேண்டும் என்று கெவிந்து குமாரதுங்க எம்.பி.வலியுறுத்தியுள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும், தற்போதைக்கு முன்வைக்கப்பட்டுள்ள 21ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது ஒட்டுமொத்த நாட்டின் வெற்றியாக கருதப்படும்.
பொருளாதார நெருக்கடி
அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒரே நேரத்தில் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது முதலில் பொருளாதார நெருக்கடி குறித்தே கவனம் செலுத்த வேண்டும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி இருக்கும் காரணத்தினால் தான் தற்போதைக்கு நடைமுறையில் உள்ள மாகாணசபைகள் முறையை பொதுமக்கள் கருத்துக் கணிப்பு இன்றி தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடிகின்றது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி
அதே போன்று விகிதாசாரத் தேர்தல் முறையில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைக் கொண்டு நிலையான ஆட்சியொன்றை தர முடியும்.
எனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நாட்டுக்கு நல்லது என்பதே எனது கருத்தாகும் என்றும் தெரிவித்துள்ளார்.