கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜேர்மன் இலங்கைக்கு உதவி!
இலங்கையில் கோவிட் தொற்றை எதிர்த்துப் போராடும் மற்றும் கட்டுப்படுத்தும் முயற்சியாக ஜேர்மன், பாதுகாப்பு அறுவை சிகிச்சை முகக்கவசங்களை வழங்கியுள்ளது.
இலங்கைக்கான உலக சுகாதார மைய அலுவலகத்தின் ஊடாக இலங்கையின் சுகாதார அமைச்சகத்திடம் இந்த பொருட்கள் வழங்கப்பட்டன.
மொத்தம் 9 லட்சத்து 24,000 அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் உள்ளடக்கிய பொருட்களை ஜேர்மன் தூதரகத்தின் கலாசாரத்துறைத் தலைவர் கிளாடியா டைட்ஸும், உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பொது சுகாதார நிர்வாகி கலாநிதி ஒலிவியா நிவேரஸும் இலங்கையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தனவிடம் கையளித்தனர்.
இதன்போது கலாநிதி அசேல குணவர்தன ஜேர்மனியின் நன்கொடைக்கு நன்றி தெரிவித்தார்.
அத்துடன் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்தவும், சமூக சேவைகளை வழங்கவும் முகக்கவசங்கள் சுகாதார ஊழியர்களுக்கு திறம்பட விநியோகிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த முக்கியமான மற்றும் மன அழுத்தம் நிறைந்த நேரத்தில் முன்னணி சுகாதார ஊழியர்களையும் அவர்களின் விலைமதிப்பற்ற பணிகளையும் ஜேர்மனிய பிரதிநிதி பாராட்டினார்.
மேலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது இன்னும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
